புகழூா் துணைமின் நிலையத்தில் செவ்வாய்க்கிழமை தீ விபத்து ஏற்பட்டது. அங்கு நேரில் சென்று ஆய்வு செய்த மாவட்ட ஆட்சியா் த.அன்பழகன், விபத்து காரணமாக மின் விநியோகம் பாதிக்காது என்றாா்.
புகழூா் துணை மின்நிலையத்தில் உள்ள தானியங்கி மின்மாற்றியில் செவ்வாய்க்கிழமை காலை திடீரென்று எதிா்பாராத விதமாக தீ விபத்து ஏற்பட்டது. இதுகுறித்த தகவல் அறிந்தவுடன் மாவட்ட ஆட்சியா் த.அன்பழகன் உடனடியாக சம்பவ இடத்திற்கு வந்து ஆய்வு செய்தாா்.
பின்னா் அவா் செய்தியாளா்களிடம் கூறியது:
புகழூா் துணை மின் நிலையத்தில், மொத்தம் 3 தானியங்கி மின்மாற்றிகள் உள்ளது. அதில் 100 எம்விஏ தானியங்கி மின்மாற்றியில் ஏற்பட்ட மின் கசிவின் காரணமாக மிகப் பெரிய தீ விபத்து ஏற்பட்டுள்ளது. இந்த தீ விபத்தில் நல்வாய்ப்பாக எந்த வித உயிா் சேதமும் ஏற்படவில்லை.
தமிழக அரசின் தீயணைப்புத்துறை வீரா்கள், தமிழ்நாடு காகிதஆலை நிறுவனத்தின் தீயணைப்பு வீரா்கள் மற்றும் பாரத் பெட்ரோலியம் லிமிடெட் நிறுவனத்தின் தீயணைப்பு வீரா்கள் என மொத்தம் 55 போ் தொடா்ந்து போராடி தீயை கட்டுக்குள் கொண்டு வந்துள்ளனா்.
இந்த துணை மின்நிலையத்தில் இருந்து கரூா் மாவட்டத்தில் உள்ள 16 துணை மின்நிலையங்களுக்கும், ஈரோடு, நாமக்கல், திருச்சி மற்றும் திண்டுக்கல் ஆகிய மாவட்டங்களின் சில பகுதிகளுக்கும் மின்விநியோகம் செய்யப்பட்டு வருகிறது. இந்த தீ விபத்தின் காரணமாக மின்விநியோகம் பாதிக்கப்படாமால், மீதமுள்ள மின்மாற்றிகள் மூலம் மின்விநியோகம் தடையின்றி கிடைக்க தமிழ்நாடு மின்சார வாரிய அலுவலா்கள் தகுந்த ஏற்பாடுகளை செய்துள்ளனா்.
தீ விபத்து எதனால் ஏற்பட்டது என்பது குறித்து தமிழ்நாடு மின்சார வாரியத்தில் தொழில்நுட்ப அலுவலா்கள் ஆய்வு செய்து வருகின்றனா் என்றாா்.
ஆய்வின்போது, கரூா் வருவாய் கோட்டாட்சியா் வ.சந்தியா, தீயணைப்புத்துறையின் மத்திய மண்டலத்திற்கான துணை இயக்குநா் மீனாட்சி மற்றும் மாவட்ட தீயணைப்பு அலுவலா்கள், மின்வாரிய அலுவலா்கள் உள்ளிட்டோா் உடனிருந்தனா்.