கரூர் பசுபதீஸ்வரர் கோயிலில் புதன்கிழமை நடைபெற்ற ராகு, கேது பெயர்ச்சி வழிபாட்டில் பக்தர்கள் திரளாகப் பங்கேற்றனர்.
புதன்கிழமை பிற்பகல் 2.02 மணிக்கு ராகு பகவான் புனர் நட்சத்திரம் நான்காம் பாதம் கடக ராசியில் இருந்து மூன்றாம் பாதம் மிதுன ராசிக்கும், கேது பகவான் உத்தராட நட்சத்திரம் இரண்டாம் பாதம் மகர ராசியிலிருந்து உத்தராட நட்சத்திரம் ஒன்றாம் பாதத்திற்கு தனு ராசியில் பிரவேசித்ததையடுத்து கரூர் பசுபதீஸ்வரர் கோயிலில் சிறப்பு வழிபாடு நடைபெற்றது. இதில் ராகு, கேது சுவாமிகளுக்கு சிறப்பு தீபாராதனை, சிறப்பு அலங்காரம் நடைபெற்றது.
ராகு, கேது இடப்பெயர்ச்சியால் பரிகாரம் செய்யக்கூடிய ரிஷிபம், மிதுனம், கன்னி, விருச்சிகம், தனுசு, மீனம் போன்ற ராசிக்காரர்கள் கோயிலில் நெய்விளக்கு ஏற்றி வழிபட்டனர். ராகு, கேது இடப்பெயர்ச்சியை கோயிலில் பசுபதீஸ்வரருக்கும், அம்பிகை தெய்வங்களுக்கும் சிறப்பு தீபாராதனை, பூஜைகள் நடைபெற்றன. வழிபாட்டில் பக்தர்கள் திரளாகப் பங்கேற்றனர்.