கரூரில் ஞாயிற்றுக்கிழமை மாவட்ட அளவிலான கராத்தே போட்டிகள் நடைபெற்றன.
கரூர் மாவட்ட கராத்தே பயிற்சி மற்றும் விளையாட்டு வீரர்கள் கழகம் சார்பில் கரூர் சுக்காலியூரில் உள்ள குருவித்யாலயா பள்ளியில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற போட்டிக்கு கராத்தே கழக தலைவர் ஏ.ஜீவாஆண்டனி, செயலர் எஸ். சரவணன் ஆகியோர் தலைமை வகித்தனர். போட்டிகளை பள்ளித் தாளாளர் சி. தங்கராஜ், முதல்வர் சரஸ்வதிகவிதா ஆகியோர் தொடக்கி வைத்தனர்.
இதில் 5 வயதுமுதல் 25 வயது வரையிலான வீரர், வீராங்கனைகளுக்கு குமித்தே, கட்டாக் பிரிவுகளில் போட்டிகள் நடைபெற்றன. திறந்தவெளி சாம்பியன்ஷிப் போட்டியில் 36 வயது வரையிலான வீரர்கள் பங்கேற்றனர். மொத்தம் 500-க்கும் மேற்பட்ட வீரர், வீராங்கனைகள் கலந்துகொண்டனர்.
இதில் ஷிண்டோ கிளப் வீரர், வீராங்கனைகள் 80 புள்ளிகளை பெற்று ஒட்டுமொத்த சாம்பியன் பட்டத்தை வென்றனர். இவர்களுக்கு கோப்பை, சான்றிதழ் வழங்கப்பட்டது. போட்டியில் நடுவர்களாக பொருளாளர் ரமேஷ் உள்ளிட்டோர் பங்கேற்றனர். மேலும் போட்டியில் வென்ற வீரர், வீராங்கனைகளுக்கு பதக்கம், சான்றிதழ்கள் வழங்கப்பட்டன.