ஏழைப்பெண்களின் திருமணத்திற்கு நிதியுதவியுடன் திருமாங்கல்யத்துக்கு தங்கம் வழங்கும் திட்டத்தின் கீழ் 1,580 பயனாளிகளுக்கு ரூ. 9.57 கோடியிலான நலத் திட்ட உதவிகளை அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் சனிக்கிழமை வழங்கினார்.
சமூக நலத் துறை சார்பில் கரூரில் நடைபெற்ற விழாவில் உதவிகளை மாவட்ட ஆட்சியர் த. அன்பழகன் தலைமையில் வழங்கி அமைச்சர் எம்.ஆர். விஜயபாஸ்கர் பேசியது:
மறைந்த முதல்வர் ஜெயலலிதா எண்ணற்ற மக்கள் நலத்திட்டங்களை அறிவித்து செயல்படுத்தினார். குறிப்பாக பெண்களின் வாழ்வாதாரம் பெருக எண்ணற்ற திட்டங்களை வழங்கியவர் ஜெயலலிதா.
இன்றைய நிகழ்ச்சியில் பட்டப்படிப்பு முடித்த 825 பயனாளிகளுக்கு தலா ரூ.50,000 நிதியுதவியும், பள்ளிப்படிப்பு முடித்த 755 பயனாளிகளுக்கு தலா ரூ,25,000 நிதியுதவியும், அனைவருக்கும் தலா 8 கிராம் தங்கம் என மொத்தம் 1,580 பேருக்கு ரூ.9.57 கோடியிலான நலத்திட்டங்கள் வழங்கப்பட உள்ளன.
மக்களின் நலனில் அக்கறை கொண்டு ஜெயலலிதா அறிவித்த திட்டங்களை அவரது வழியில் செயல்படும் தமிழக முதல்வரும் தொடர்ந்து சிறப்பாகச் செயல்படுத்தி வருகிறார். பொதுமக்கள் அனைவரும் தமிழக அரசின் திட்டங்களை நல்லமுறையில் பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என்றார்.
நிகழ்ச்சியில் கிருஷ்ணராயபுரம் எம்எல்ஏ எம். கீதாமணிவண்ணன், மாவட்ட வருவாய் அலுவலர் ச. சூர்யபிரகாஷ், வருவாய்க் கோட்டாட்சியர் கு. சரவணமூர்த்தி, வட்டாட்சியர் ஈஸ்வரன், மாவட்ட சமூகநல அலுவலர் ரவிபாலா, முன்னாள் எம்எல்ஏ எஸ். காமராஜ், கூட்டுறவு சங்கப் பிரதிநிதிகள் செல்வராஜ், ஏ.ஆர். காளியப்பன், வை. நெடுஞ்செழியன், பி. மார்க்கண்டேயன், விசிகே. ஜெயராஜ், மற்றும் மாவட்ட செயற்குழு உறுப்பினர் ஆர். மணிவண்ணன், செல்மணி உள்ளிட்டோர் பங்கேற்றனர்.