தொடர்ந்து 5 நாட்கள் விடுமுறை என்பதால் சொந்த ஊர் செல்ல கரூர் பேருந்து நிலையத்தில் வெளியூர் பயணிகள் சனிக்கிழமை இரவு ஏராளமானோர் குவிந்தனர்.
தொழில் நகரான கரூரில் மாவட்ட தொழிலாளர்கள் மட்டுமின்றி, திருச்சி, திண்டுக்கல், மதுரை, தூத்துக்குடி, திருநெல்வேலி உள்ளிட்ட வெளிமாவட்ட தொழிலாளர்களும் தங்கி பணியாற்றி வருகின்றனர். பொங்கல் பண்டிகை முன்னிட்டு சனிக்கிழமை முதல் வியாழக்கிழமை வரை 5 நாட்கள் விடுமுறை விடப்படுவதால் கரூர் மாவட்டத் தொழிலாளர்கள் சனிக்கிழமை காலை முதல் இரவு வரை தங்களது சொந்த ஊர் செல்ல கரூர் பேருந்து நிலையத்தில் குவிந்தனர். கூட்ட நெரிசலையும் பொருட்படுத்தாமல் பேருந்துகளில் ஏறி தங்களது சொந்த ஊருக்குச் சென்றனர்.
இதனால் கரூர் பேருந்து நிலையத்தில் பயணிகள் கூட்டம் நிரம்பி வழிந்தது. மேலும் கரூர் வழியாக தென்மாவட்டங்களுக்குச் செல்லும் ரயில்களிலும் பயணிகள் கூட்டம் அதிகளவில் காணப்பட்டது.