பள்ளி, கல்லூரிகளில் பாரம்பரியத்துடன் நடந்த பொங்கல் விழா

தமிழர்களின் பாரம்பரியத்தை வெளிப்படுத்தும் வகையில் காளை மாடுகளை அழைத்து வந்தும், மாணவர்கள் வேஷ்டி,

தமிழர்களின் பாரம்பரியத்தை வெளிப்படுத்தும் வகையில் காளை மாடுகளை அழைத்து வந்தும், மாணவர்கள் வேஷ்டி, சட்டை, மாணவிகள் சேலை, தாவணி அணிந்தும் கரூர் மாவட்டப் பள்ளி, கல்லூரிகளில் பொங்கல் விழா சனிக்கிழமை கொண்டாடப்பட்டது.
வெண்ணைமலை சேரன் பள்ளியில் நடைபெற்ற விழாவுக்கு பள்ளித் தலைவர் பிஎம். கருப்பண்ணன் முன்னிலையில் பொங்கல் வைத்து மாணவர்களுக்கு வழங்கப்பட்டது. பின்னர் நடைபெற்ற கலை விழாவுக்கு பள்ளி ஆலோசகர் பி. செல்வதுரை தலைமை வகித்தார். பள்ளி முதல்வர் வி. பழனியப்பன் வரவேற்றார். நிர்வாகி கே. பெரியசாமி, தாளாளர் கே. பாண்டியன், ஆலோசனைக் குழு உறுப்பினர்கள் பங்கேற்றனர்.
விழாவில் சிறப்பு விருந்தினராக நடிகர் ராகவா லாரன்ஸ் நடனக்குழுவின் மாற்றுத்திறனாளி சந்தானம் என்பவர் இருகால்களும் இல்லாத நிலையில் திரைப்பட பாடலுக்கு ஏற்ப சாகச நடனம் ஆடி அனைவரையும் ஈர்த்தார். அவர் நெருப்பின் மேல் நடனம் ஆடியது, சாகசம் ஆகியவற்றை மாணவ, மாணவிகள் ரசித்தனர். தொடர்ந்து மாணவ, மாணவிகளின் கலைநிகழ்ச்சிகள் நடைபெற்றன. போட்டிகளில் வென்றோருக்குப் பரிசுகள் வழங்கப்பட்டது.
பரணி பார்க் கல்விக் குழுமத்தில் பொங்கல் திருவிழா மற்றும் தேசிய இளைஞர் தின விழா கொண்டாடப்பட்டது. கல்விக் குழுமத் தலைவர் எம். குமாரசாமி தலைமையில் நடைபெற்ற விழாவில் கல்விக் குழுமத் தாளாளர் எஸ். மோகனரெங்கன், செயலர் பத்மாவதி மோகனரெங்கன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். 
முதன்மை முதல்வர் சொ. ராமசுப்ரமணியன் பேசினார். விழாவில் 9 பானைகளில் பொங்கல்வைக்கப்பட்டது. மாணவ,மாணவிகள் பாரம்பரிய உடையணிந்து வந்திருந்தனர். விழாவில் ரேக்ளா பந்தயம் மற்றும் ஜல்லிக்கட்டில் கலந்து கொள்ளும் காளைகள் நேரடியாக மாணவர்களுக்கு அறிமுகப்படுத்தப்பட்டது. தமிழர்களின் நடனங்களான கரகாட்டம், மயிலாட்டம், தப்பாட்டம், காவடியாட்டம் போன்றவை தமிழர் பாரம்பரியத்தை பறைசாற்றும் வகையில் மாணவர்கள் அரங்கேற்றினர். 
விழாவில் நிர்வாக அலுவலர் சுரேஷ், பரணி பார்க் பள்ளி முதல்வர் சேகர், பரணி வித்யாலயா பள்ளி முதல்வர் சுதாதேவி, எம்.குமாரசாமி கல்வியியல் முதல்வர் சாந்தி உள்ளிட்டோர் பங்கேற்றனர். 
கரூர் தாந்தோணிமலை மலர் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில் 17- ம் ஆண்டு விளையாட்டு விழா மற்றும் பொங்கல் விழா நடைபெற்றது. காவல் ஆய்வாளர் அமிர்தலிங்கம் விளையாட்டுப்போட்டிகளை துவக்கி வைத்து பரிசு வழங்கினார். பொங்கல் விழா பள்ளித்தாளாளர் பேங்க் கே. சுப்ரமணியன் தலைமையில் நடைபெற்றது. பள்ளி முதல்வர் பாலகிருஷ்ணன் வரவேற்றார். பள்ளி இயக்குநர்கள் பெரியசாமி, சுப்பன், மணிவண்ணன், ஜெகதீஷ், காவல்துறை ஆய்வாளர் பிரகாஷ் உள்ளிட்டோர் பங்கேற்றனர். 
காகிதபுரம் டிஎன்பிஎல் பள்ளியில் நடைபெற்ற விழாவிற்கு பள்ளி முதல்வர் வா.மு. அய்யப்பன் தலைமை வகித்தார். 
இதில் மாணவர்களுக்கு இசை நாற்காலி, பானை உடைத்தல், முறுக்குகடித்தல், கோலப்போட்டி உள்ளிட்ட போட்டிகள் நடத்தப்பட்டு பரிசுகள் வழங்கப்பட்டன. தளவாபாளையம் எம். குமாரசாமி பொறியியல் கல்லூரியில் நடைபெற்ற பொங்கல் விழாவை கல்லூரி முதல்வர் என். ரமேஷ்பாபு துவக்கி வைத்தார். இதில் மாணவ, மாணவிகளுக்கு போட்டிகள் நடத்தி, கல்லூரியின் டிரஸ்டி விஜயாராமகிருஷ்ணன் பரிசுத்தொகை வழங்கினார். 
கரூர் கொங்கு கலை அறிவியல் கல்லூரியில் நடைபெற்ற கொங்கு கல்வி நிறுவனங்களின் தலைவர் அட்லஸ் எம்.நாச்சிமுத்து தலைமை வகித்தார். இணைச் செயலர் விசா ம. சண்முகம் முன்னிலை வகித்தார். கல்லூரித்தாளாளர் சிவக்குமார் வரவேற்றார். விழாவில் போட்டிகள் நடத்தப்பட்டு பரிசுகள் வழங்கப்பட்டன.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com