தமிழ்மொழியின் பெருமை பேசினால் மட்டும் போதாது. மாறாக தமிழ்மொழியை உலகம் முழுவதும் நாம் தான் கொண்டு செல்ல வேண்டும் என்றார் ஓய்வுபெற்ற கோவை மேற்கு மண்டல காவல் துறைத் தலைவர் அ. பாரி.
கரூர் மாவட்ட உலகத் திருக்குறள் கூட்டமைப்பின் சார்பில் கரூரில் புதன்கிழமை திருவள்ளுவர் ஆண்டு 2050-வது திருநாள் விழாவில் அவர் பங்கேற்று மேலும் பேசியது:
உலகின் மூத்த மொழியாம் தமிழ்மொழி சாகா வரம்பெற்றது. உலகம் அழியும் வரை செம்மொழியாம் தாய்மொழி உயிர்ப்போடு இருந்துகொண்டுதான் இருக்கும். ஒளவைக்கு அதியமான் நெல்லிக்கனி கொடுத்தபோது, ஒளவையே நீ நெல்லிக்கனியை உண்டதால் தமிழ்மொழி சாகா வரம் பெற்றது என்றாராம். தமிழ்மொழியின் பெருமை பேசினால் மட்டும் போதாது. மாறாக தமிழ்மொழியை உலகம் முழுவதும் நாம் தான் கொண்டு செல்ல வேண்டும். அதற்கு தமிழ்மொழியோடு மற்ற மொழிகளையும் சிறப்புற கற்க வேண்டும். அப்போதுதான் தமிழின் மேன்மையை உலகம் முழுவதும் எடுத்துச் செல்ல முடியும். வெளிநாட்டவரும் நம் தாய்மொழியின் மேன்மையைப் புரிந்துகொள்ள இயலும். தமிழ்மொழியை மட்டும் நன்கு கற்றுக்கொண்டு, தமிழை உலகளாவிய முறையில் பரவ வேண்டும் என்றால் முடியாது. மனிதனின் முயற்சிக்கு உந்துதலாக அமைந்த முதல் நூல் திருக்குறளே. சாக்ரடீஸ், கன்பூசிஸ், அரிஸ்டாட்டில் போன்ற தத்துவ ஞானிகள் சமுதாயத்தைப் பற்றி சிந்தித்தார்கள். சமுதாயத்திலே நம்பிக்கை விதைத்தவர்கள் அவர்கள். அவர்களைப் போல நாமும் வாழ முயற்சிக்க வேண்டும் என்றார்.
இவ்விழாவுடன், காவல் அதிகாரியின் பணி ஓய்வு பாராட்டு விழாவும் இணைத்து நடத்தப்பட்டது.
இந்நிகழ்ச்சியில், கருவூர் மாவட்ட உலகத் திருக்குறள் கூட்டமைப்புச் செயலர் மேலை.பழனியப்பன் வரவேற்றார். சிறப்புத் தலைவர் க.செங்குட்டுவன் தலைமை வகித்தார். முன்னாள் காவல் துறை அதிகாரி ம. பொன்னிறைவன், பழ. ஈசுவரமூர்த்தி, கருவூர் மாவட்ட உலகத்திருக்குறள் கூட்டமைப்பின் தலைவர் தென்னிலை இராம.கோவிந்தன் உள்ளிட்டோர் பங்கேற்றனர். பாவலர் வ.சரவணன் நன்றி கூறினார்.