எம்ஜிஆரின் பிறந்த தினத்தை முன்னிட்டு கரூர் அடுத்த நெரூரில் வியாழக்கிழமை இரவு அதிமுக பொதுக்கூட்டம் நடைபெற்றது.
அதிமுக மாவட்ட செயற்குழு உறுப்பினர் ஆர்.மணிவண்ணன் தலைமையில் நடைபெற்ற அதிமுக பொதுக்கூட்டத்தில் போக்குவரத்துதுறை அமைச்சர் எம்ஆர்.விஜயபாஸ்கர் பங்கேற்று மேலும் பேசியது:
காலம் கடந்து வாழ்பவர் எம்ஜிஆர். இன்று கல்வியறிவு பெற்ற மாநிலங்களில் முதல் மாநிலமாக தமிழகம் திகழ அன்றே விதை போட்டவர் எம்ஜிஆர். அவரது சத்துணவு திட்டத்தை ஐநா சபை பாராட்டியது.
அவரது மறைவுக்குபின் இந்த இயக்கம் சோதனை கண்டபோது இழந்த இரட்டை இலை சின்னத்தை மீட்டு
மீண்டும் இந்த இயக்கத்தை ஒருகோடியே 50 லட்சம் உறுப்பினர்களாக கொண்ட மாபெரும் இயக்கமாக மாற்றியவர் ஜெயலலிதா.
பொய்யான வாக்குறுதி அளிப்பதுதான் திமுகவின் மந்திரம். ஜெயலலிதா பெண்களுக்காகவே எண்ணற்ற திட்டங்களை கொண்டு வந்து என்றும் நம் நினைவில் இருக்கிறார் என்றார்.
முன்னதாக, கட்சி பேச்சாளர் நிர்மலா பெரியசாமி சிறப்புரையாற்றினார்.
கரூர் ஒன்றியச் செயலாளர் கமலக்கண்ணன் வரவேற்றார். கிருஷ்ணராயபுரம் தொகுதி எம்எல்ஏ கீதா மணிவண்ணன் முன்னிலை வகித்தார்.
கூட்டத்தில், மாவட்ட நிர்வாகிகள் ஏ.ஆர்.காளியப்பன், பசுவை சிவசாமி, எம்.செல்வராஜ், நகரச் செயலாளர் வை.நெடுஞ்செழியன் உள்ளிட்டோர் திரளாக பங்கேற்றனர்.