கரூர் மாவட்டம், வேலாயுதம்பாளையம் புகழிமலை அருள்மிகு பாலசுப்பிரமணிய சுவாமி கோயில் தைப்பூசத் திருவிழாவையொட்டி, இரண்டாவது நாளாக செவ்வாய்க்கிழமையும் தேரோட்டம் நடைபெற்றது. ஏராளமான பக்தர்கள் தேரோட்டத்தில் பங்கேற்றனர்.
இக்கோயிலில் தைப்பூசத் தேர்த் திருவிழா கடந்த 15 ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. தொடர்ந்து கட்டளைதாரர்கள் மண்டகப்படியும், ஜன.20 ஆம் தேதி திருக்கல்யாண உற்ஸவம் நடைபெற்றது.
தைப்பூசத் தினமான திங்கள்கிழமை காலை முதல் பாலசுப்பிரமணிய சுவாமிக்கு சிறப்பு அபிஷேகம் மற்றும் தீபாராதனை நடந்தது. சுவாமி ராஜ அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள் பாலித்தார்.
காலை முதல் பக்தர்கள் பல்வேறு காவடி எடுத்து வந்து தங்கள் வேண்டுதல்களை நிறைவேற்றினர் .
மாலை 5 மணிக்கு வள்ளி, தெய்வசேனா சமேத பாலசுப்ரமணிய சுவாமி எழுந்தளிய பின்னர் தேர் வடம்பிடிக்கப்பட்டது.
காந்தி நகர் வரை தேரை இழுத்த பக்தர்கள் பின்னர் நிறுத்திச் சென்றனர். இதைத் தொடர்ந்து, இரண்டாம் நாளான செவ்வாய்க்கிழமை மாலை மறுதேர் இழுத்தல் நடந்தது. ஏராளமான பக்தர்கல் கந்தம்பாளையம் வழியாக தேர் வடம்பிடித்து இழுத்து சென்று மலையடிவாரத்தில் மீண்டும் தேர்நிலையில் நிறுத்தினர்.
கோயில் செயல் அலுவலர் சுரேஷ், மாவட்ட கூடுதல் காவல் கண்காணிப்பாளர் பாஸ்கரன், துணைக் காவல் கண்காணிப்பாளர் முத்தமிழ்செல்வன், பேரூராட்சி செயல்அலுவலர்கள் புஞ்சை புகழூர் சத்தியமூர்த்தி, காகிதபுரம் வெங்கடேசன், தோட்டக்குறிச்சி பாலசுப்ரமணியன், காகிதபுரம் பேரூராட்சி முன்னாள் தலைவர் கமலக்கண்ணன், பேரூர் செயலர்கள் புஞ்சை புகழூர் சரவணன், காகிதபுரம் சதாசிவம், தோட்டக்குறிச்சி அன்பழகன், முன்னாள் மாவட்டக் கூட்டுறவு அச்சக தலைவர் விவேகானந்தன் உள்ளிட்டோர் தேரோட்டத்தில் பங்கேற்றனர்.