கல்லூரி மாணவிகளுக்கு பாலியல் தொல்லை: உதவி பேராசிரியருக்கு ஜாமீன்

கரூர் அரசுக் கல்லூரி மாணவிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்த வழக்கில், உதவிப் பேராசிரியர்

கரூர் அரசுக் கல்லூரி மாணவிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்த வழக்கில், உதவிப் பேராசிரியர் இளங்கோவனுக்கு ஜாமீன் வழங்கி கரூர் நீதிமன்றம் திங்கள்கிழமை உத்தரவிட்டுள்ளது. 
கரூர் தாந்தோன்றிமலை அரசுக் கல்லூரியின் பொருளாதாரத் துறை தலைவரும், உதவிப் பேராசிரியருமான இளங்கோவன் (53) தங்களுக்கு பாலியல் தொல்லை அளித்ததாக அக்கல்லூரி மாணவிகள் சிலர் கடந்த சில மாதங்களுக்கு முன்பு கரூர் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். அதன் பேரில் உதவிப் பேராசிரியர் கைது செய்யப்பட்டு திருச்சி மத்திய சிறையில் அடைக்கப்பட்டார். இது தொடர்பான வழக்கு கரூர் மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் நடைபெற்றுவந்தபோது நீதிபதி, இளங்கோவனுடைய ஜாமீன் மனுவைத் தள்ளுபடி செய்து உத்தரவிட்டார்.
இந்த வழக்கில் 90 நாட்களாகியும் நீதிமன்றத்தில் குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்யப்படவில்லை எனக் கூறப்படுகிறது. இந்நிலையில், இளங்கோவன் தரப்பில் ஜாமீன் கேட்டு மீண்டும் மனுத்தாக்கல் செய்யப்பட்டது. குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்யப்படாததால், இந்த வழக்கு விசாரணையின் போது, நீதிபதி கிறிஸ்டோபர் குற்றம்சாட்டப்பட்ட இளங்கோவனுக்கு சிதம்பரம் நீதித்துறை நடுவர் நீதிமன்றம் 1-இல் தினமும் காலை 10.30 மணிக்கு ஆஜராகி மறுஉத்தரவு வரும் வரை கையெழுத்திடுவது என்கிற நிபந்தனையின் பேரில் ஜாமீன் வழங்கி உத்தரவிட்டார்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com