கரூர் மாவட்டம், குளித்தலை நகர் பகுதியில் தடை செய்யப்பட்ட பாலித்தீன் மற்றும் காலாவதியான உணவுப் பொருள்களை அதிகாரிகள் புதன்கிழமை பறிமுதல் செய்தனர்.
தமிழக அரசால் தடை செய்யப்பட்டுள்ள பாலித்தீன் பைகள் மற்றும் காலாவதியான உணவுப்பொருட்கள் குளித்தலை பகுதியில் விற்கப்படுகின்றனவா என மாவட்ட வருவாய் அலுவலர் ச.சூர்யபிராஷ் தலைமையில், மாவட்ட உணவுப் பாதுகாப்புத் துறை மற்றும் நகராட்சி நிர்வாகத்துறை அலுவலர்கள் கொண்ட 5 பேர் அடங்கிய 3 குழுவினர் புதன்கிழமை குளித்தலை பேருந்து நிலையம், காவேரி நகர், பெருமாள் கோவில் தெரு, வருவாய் கோட்டாட்சியர் அலுவலகம் முதல் சுங்ககேட் வரை, பெரியபாலம் முதல் ஆண்டாள் மெயின் ரோடு ஆகிய பகுதிகளில் உள்ள பேக்கரி கடைகள், உணவகங்கள், பழக்கடைகள் உள்ளிட்ட 57 கடைகளில் திடீர் ஆய்வு மேற்கொண்டனர்.
ஆய்வின்போது 21 கடைகளில் தடைசெய்யப்பட்ட பாலித்தீன் பயன்பாட்டில் இருப்பதும், காலாவதியான உணவுப்பொருட்கள் விற்பனை செய்யப்படுவதும் கண்டறியப்பட்டு, கடை உரிமையாளர்களுக்கு ரூ.26,700 அபராதம் விதிக்கப்பட்டது. ஆய்வின்போது குளித்தலை நகராட்சி ஆணையர்(பொ)கார்த்திகேயன், மாவட்ட உணவுப் பாதுகாப்பு அலுவலர் மருத்துவர் சசிதீபா, கரூர் நகர் நல அலுவலர் மருத்துவர் ஸ்ரீப்ரியா ஆகியோர் உடனிருந்தனர்.