கரூரில் கோயில் நிலத்தில் பட்டா பெற்று, வீடு கட்டி வசிக்கும் ஏழைகளின் பிரச்னைக்கு தீர்வு காண வேண்டும் என சட்டப்பேரவையில் பேசினார் கிருஷ்ணராயபுரம் சட்டப்பேரவை உறுப்பினர் எம். கீதா மணிவண்ணன்.
தமிழக சட்டப்பேரவையில் புதன்கிழமை சமூக நலத்துறை மானியக் கோரிக்கை விவாதத்தின் போது அவர் மேலும் பேசியது: கரூரில் உள்ள பழைமை வாய்ந்த கோயில்களில் பணியாற்றி வந்த ஊழியர்களுக்கு ஊதிய மானியத் திட்டத்தின் கீழ் கடந்த 1963-ஆம் ஆண்டுக்குப் பிறகு அவர்களுக்கு பட்டா வழங்கப்பட்டது. தற்போது அவர்கள் அங்கு வீடுகட்டி வாழ்ந்து வருகின்றனர். இந்நிலையில் சமூக ஆர்வலர்கள் சிலர் கோயில் நிலங்கள் குறித்து நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்து அவர்களுக்கு இடையூறு செய்கின்றனர். இதனால் அவர்கள் மின்சார வசதி பெற முடியாமல் மிகவும் சிரமப்பட்டு வருகின்றனர். அவர்களின் நிலையறிந்த அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர், முதல்வர், துணை முதல்வர் ஆகியோரது கவனத்துக்கு கொண்டு சென்றார். ஆனால் இன்னும் தீர்வு எட்டப்படவில்லை என்றார்.