கரூர் பரணி பார்க் பள்ளியில் உலக காகிதப்பை தினம் சனிக்கிழமை கொண்டாடப்பட்டது.
நெகிழியை மறுப்போம், பசுமை உலகு சமைப்போம்! என்ற தலைப்பில் நடைபெற்ற இவ்விழாவில் பரணி பார்க் பள்ளியைச் சேர்ந்த மழலையர் பிரிவு குழந்தைகள் கலந்து கொண்டு நாம் அன்றாடம் பயன்படுத்தும் செய்தித்தாள்களைப் பயன்படுத்தி 500 காகிதப் பைகளை தாங்களே தயார் செய்து அனைத்து வகுப்புகளிலும் விழிப்புணர்வு ஏற்படுத்தினர். சிறு குழந்தைகளே காகித பைகளை செய்து அனைத்து வகுப்பிலும் வழங்கி காகிதப் பை பயன்படுத்த வேண்டுகோள் விடுத்ததை அனைவரும் வெகுவாகப் பாராட்டினர்.
விழாவில் பள்ளியின் முதன்மை முதல்வர் முனைவர் சொ.ராமசுப்ரமணியன் பேசுகையில், நெகிழி இல்லா உலகு படைக்க அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. உலக காகிதப் பை தினமான பிளாஸ்டிக் பொருட்கள் மற்றும் பைகளை பயன்படுத்துவதால் ஏற்படும் தீமைகள் குறித்தும், அதற்கு மாற்றாக காகிதப் பைகளை எவ்வாறு பயன்படுத்துவது, அதை நாமே எவ்வாறு தயார் செய்வது என்பது குறித்து குழந்தைகளுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் இவ்விழா அமைந்தது என்றார். விழாவில் பள்ளியின் தாளாளர் எஸ்.மோகனரெங்கன்,செயலாளர் பத்மாவதி மோகனரெங்கன், நிர்வாக அலுவலர் எம்.சுரேஷ், முதல்வர் கே.சேகர், துணை முதல்வர் கே.மகாலட்சுமி மற்றும் இருபால் ஆசிரியர்கள் கலந்து கொண்டனர்.