இளைஞரை நாட்டுத் துப்பாக்கியால் சுட்டு மிரட்டி, அரிவாளால் வெட்டிய நிதிநிறுவன அதிபர் உள்பட 5 பேரை போலீஸார் தேடுகின்றனர்.
கரூர் பூர்ணிமா கார்டன் பகுதியைச் சேர்ந்த லீலாகுமார் மகன் விக்னேஷ் (32). இவர் கரூர் வடிவேல் நகரைச் சேர்ந்த சக்திவேல் (32) நடத்தி வரும் நிதி நிறுவனத்தில் கடந்த சில ஆண்டுகளுக்கு முன் வேலை
பார்த்தாராம். அப்போது இவர்களுக்கிடையே கொடுக்கல்-வாங்கல் தகராறு இருந்தது.
இந்நிலையில் விக்னேஷ் வீட்டுக்கு செவ்வாய்க்கிழமை இரவு தனது நண்பர்கள் 4 பேருடன் காரில் சென்ற சக்திவேல் தனக்குத் தரவேண்டிய பணத்தை இப்போதே கொடு, இல்லையேல் துப்பாக்கியால் சுட்டுவிடுவேன் எனக்கூறி கையில் வைத்திருந்த நாட்டுத் துப்பாக்கியால் விக்னேஷை சுட்டாராம். அப்போது குறிதவறி குண்டு சுவற்றில் பாய்ந்தது. பின்னர் தனது நண்பர்களுடன் சேர்ந்து சக்திவேல் விக்னேஷை அரிவாளால் வெட்டினாராம்.
இதில் அலறி துடித்த விக்னேஷை மிரட்டி விட்டு அவர்கள் தப்பி விட்டார்களாம். இதில் காயமடைந்த விக்னேஷை அக்கம்பக்கத்தினர் மீட்டு கரூர் அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர்.
விக்னேஷ் அளித்த புகாரின்பேரில் வெங்கமேடு போலீஸார் வழக்குப்பதிந்து சக்திவேல் மற்றும் அவரது நண்பர்கள் உள்பட 5 பேரைத் தேடுகின்றனர்.