படித்த வேலைவாய்ப்பற்ற இளைஞர்களுக்கு மானியத்துடன் கூடிய தொழில் கடன் பெற விண்ணப்பிக்கலாம்.
இதுதொடர்பாக மாவட்ட தொழில் மைய மேலாளர் விடுத்துள்ள செய்திக்குறிப்பு: படித்த வேலைவாய்ப்பற்ற இளைஞர்களுக்கான வேலைவாய்ப்பு உருவாக்கும் திட்டத்தின் கீழ் சுயதொழில் செய்வதற்கான கடனுதவித் திட்டம் தமிழ்நாடு அரசு மாவட்ட தொழில் மையங்கள் மூலமாக செயல்படுத்தப்படுகிறது.
இத்திட்டத்தின் கீழ் பயன்பெற www.msmeonline.tn.gov.in/uyegp என்ற இணைய தள முகவரியின் கீழ் விண்ணப்பிக்கலாம். இத்திட்டத்தின் கீழ் உற்பத்தி, சேவை, வியாபாரத் தொழிலுக்கு முறையே அதிகபட்சமாக ரூ. 10 லட்சம், ரூ. 3 லட்சம், ரூ.1லட்சம் வரை சுய தொழில் செய்ய வங்கிகள் மூலம் மானியத்துடன் கூடிய கடனுதவி பெறலாம்.
இத்திட்டத்தில் விண்ணப்பிக்க குறைந்தபட்சமாக எட்டாம் வகுப்பு தேர்ச்சிப் பெற்றிருக்க வேண்டும். 18 வயது நிரம்பியவராக இருக்க வேண்டும். அதிகபட்ச வயது பொது பிரிவினருக்கு 35, சிறப்பு பிரிவினருக்கு 45 என நிர்ணயிக்கப்பட்டுள்ளது. குடும்ப ஆண்டு வருமானம் ரூ. 1,50,000-க்கு மிகாமல் இருத்தல் அவசியம். குடும்ப அட்டை நகல் அல்லது இருப்பிட சான்றிதழ் நகலுடன் விண்ணப்பிக்க வேண்டும். குறைந்தபட்சம் மூன்று ஆண்டுகள் கரூர் மாவட்டத்தில் வசிப்பவராக இருக்க வேண்டும். மேலும் திட்ட மதிப்பீட்டில் பொது பிரிவினர் 10 சதவீதம் மற்றும் ஆதிதிராவிடர், பழங்குடியினர், மகளிர், சிறுபான்மையினர், பிற்படுத்தப்பட்ட வகுப்பினர், மிகவும் பிற்படுத்தப்பட்ட வகுப்பினர், முன்னாள் ராணுவத்தினர், மாற்றுத் திறனாளிகள், திருநங்கையர் ஆகியோர் 5 சதவீதம் விளிம்பு தொகையாக வங்கியில் செலுத்த வேண்டும்.
இத்திட்டத்தின் மூலம் கடன் பெறுபவர்களுக்கு திட்ட மதிப்பீட்டில் 25 சதவீதம் (அதிகபட்சம் ரூ. 1,25,000- வரை) அரசு மானியமாக வழங்குகிறது எனத் தெரிவித்துள்ளார். கரூர் மாவட்டத்தை சேர்ந்த ஆர்வமுள்ள தொழில் முனைவோர் இத்திட்டத்தின் கீழ் பயன் பெற இணையம் மூலம் விண்ணப்பிக்கலாம். மேலும் விவரங்களுக்கு பொது மேலாளர், மாவட்ட தொழில் மையம், கரூர் அலுவலகத்தை (04324 -255177) என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம்.