கரூர்: நிகழாண்டு முதல் ஏழை மாணவர்கள் சித்த மருத்துவம், நர்சிங் கல்வி பயிலவும் நிதியுதவி வழங்குவது என கர்மயோகி காமராசர் கல்வி அறக்கட்டளை முடிவு செய்துள்ளது.
கரூரில் கர்மயோகி காமராசர் கல்வி அறக்கட்டளையின் பொதுக்குழுக்கூட்டம் செவ்வாய்க்கிழமை மாலை அறக்கட்டளை தலைவர் ப.சின்னசாமி தலைமையில் நடைபெற்றது.
கூட்டத்தில், துணைத்தலைவர் அன்பொளி காளியப்பன் வரவேற்றார்.செயலாளர் கு.குணசேகரன் ஆண்டறிக்கை வாசித்தார். பொருளாளர் இரா.தனபதி சென்ற ஆண்டின் வரவு செலவு கணக்குகளை வாசித்தார்.
கூட்டத்தில், வழக்கம்போல நல்ல மதிப்பெண் பெற்றும், மருத்துவம்(எம்பிபிஎஸ்), பிஎஸ்சி விவசாயம், கால்நடை மருத்துவர் போன்ற படிப்புகள் பயில வசதியின்றி தவிக்கும் ஏழை மாணவ, மாணவிகளுக்கு ஆண்டுதோறும் வழங்கும் நிதியுதவியை நிகழாண்டும் தொடர்ந்து வழங்குவது, நிகழாண்டு முதல் நர்சிங் மற்றும் சித்த மருத்துவம், ஆயுர்வேத மருத்தும் போன்ற மருத்துவபடிப்புகளுக்கும் ஏழை மாணவர்களுக்காக கல்விச் செலவுக்கான நிதியுதவி வழங்குவது என்பன உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
கூட்டத்தில், நிகழ்ச்சிகளை பேராசிரியர் ச.சேதுபதி தொகுத்து வழங்கிட, துணைச் செயலாளர் எஸ்கேடி. எம்.கருப்புசாமி நன்றி கூறினார். நிகழ்ச்சியில் சேரன் பள்ளிகளின் தாளாளர் பிஎம்கே.பாண்டியன் உள்ளிட்ட அறக்கட்டளை உறுப்பினர்கள் திரளாகப் பங்கேற்றனர்.