தேர்தல் அலுவலரை அச்சுறுத்திய வழக்கு: அரவக்குறிச்சி எம்எல்ஏ செந்தில்பாலாஜி,  கரூர் எம்.பி ஜோதிமணிக்கு ஜாமீன்

மாவட்ட தேர்தல் அலுவலருக்கு மிரட்டல் விடுத்த வழக்கில் கரூர் நீதிமன்றத்தில் செவ்வாய்க்கிழமை ஆஜரான

மாவட்ட தேர்தல் அலுவலருக்கு மிரட்டல் விடுத்த வழக்கில் கரூர் நீதிமன்றத்தில் செவ்வாய்க்கிழமை ஆஜரான கரூர் எம்.பி ஜோதிமணி, அரவக்குறிச்சி எம்எல்ஏ. வி.செந்தில்பாலாஜி ஆகியோருக்கு நீதிமன்றம் ஜாமீன் வழங்கியது.
        மக்களவைத் தேர்தல் இறுதிக்கட்ட பிரசாரத்துக்கான அனுமதி தொடர்பாக வி.செந்தில்பாலாஜி, செ.ஜோதிமணி, வழக்குரைஞர் செந்தில் குமார் உள்ளிட்டோர் ஏப்.15-ஆம் தேதி நள்ளிரவு தனது வீட்டின் முன்பு சட்ட விரோதமாக கூடி, அச்சுறுத்தி மிரட்டியதாக தாந்தோணிமலை போலீஸில் மாவட்ட ஆட்சியர் த. அன்பழகன் (ஏப். 16) புகார் அளித்தார்.  அவரது புகாரின்பேரில் வி.செந்தில்பாலாஜி, ஜோதிமணி, வழக்குரைஞர் செந்தில்குமார் ஆகியோர் மீது 4 பிரிவுகளின் கீழ் தாந்தோணிமலை போலீஸார் வழக்கு பதிவு செய்தனர்.  
இந்த வழக்கில் ஜோதிமணி, செந்தில்பாலாஜி, வழக்குரைஞர் செந்தில்குமார் ஆகியோர் உயர் நீதிமன்ற மதுரை கிளையில் ஜாமீன் கோரி மனு தாக்கல் செய்த நிலையில் தாந்தோணிமலை காவல் நிலையத்தில் வாரத்தில் 2 நாட்கள் ஆஜராகி கையெழுத்திடவேண்டும் என்ற நிபந்தனையுடன் செவ்வாய்க்கிழமை நீதிமன்றம் ஜாமீன் வழங்கியது. 
       இதையடுத்து, கரூர் குற்றவியல் நடுவர் நீதிமன்றம் 1-இல் கரூர் எம்பி செ.ஜோதிமணி, அரவக்குறிச்சி எம்எல்ஏ வி.செந்தில்பாலாஜி, வழக்குரைஞர் செந்தில்குமார் ஆகியோர் குற்றவியல் நடுவர் விஜயகார்த்திக் முன்பு செவ்வாய்க்கிழமை ஆஜராகி ஜாமீன் பெற்றனர்.  
இதுதவிர, கரூர் மாவட்டம் அரவக்குறிச்சி தொகுதி லிங்கமநாயக்கன்பட்டியில் கடந்த மார்ச் 29-ஆம் தேதி அதிமுகவைச் சேர்ந்த திருமூர்த்தி தாக்கப்பட்ட வழக்கில் அவர் அளித்த புகாரின்பேரில், செந்தில்பாலாஜி உள்ளிட்ட 19 பேர் மீது அரவக்குறிச்சி போலீஸார் வழக்கு பதிவு செய்திருந்தனர். இவ்வழக்கில் கரூர் குற்றவியல் நடுவர் நீதிமன்றம் 2-இல் செந்தில்பாலாஜி செவ்வாய்க்கிழமை ஆஜராகி ஜாமீன் பெற்றார்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com