மக்களவை பொதுத்தேர்தலில் பத்திரிகைகள் மற்றும் தொலைக்காட்சிகளில் அரசியல் கட்சிகளின் விளம்பரங்கள் ஒளிபரப்பப்படுவதை கண்காணிப்பது உள்ளிட்ட பணிகளை மேற்கொள்ளும் வகையில் "ஊடக சான்றளிப்பு மற்றும் கண்காணிப்புக்குழு' அமைக்கப்பட்டுள்ளது.
மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் அமைக்கப்பட்டுள்ள இந்த ஊடக சான்றளிப்பு மற்றும் கண்காணிப்பு குழுவினர் பயன்படுத்தவுள்ள அறையின் ஏற்பாடுகளை தேர்தல் நடத்தும் அலுவலரும், மாவட்ட ஆட்சியருமான த.அன்பழகன் வியாழக்கிழமை பார்வையிட்டு ஆய்வுசெய்தார். பின்னர் அவர் செய்தியாளர்களிடம் மேலும் கூறியது:
கரூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் செய்தி மக்கள் தொடர்பு அலுவலகத்திற்கு அருகே ஊடக சான்றளிப்பு மற்றும் கண்காணிப்புக் குழுவினருக்கான அறையும் , ஊடக மையத்திற்கான அறையும் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. ஊடக சான்றளிப்பு மற்றும் கண்காணிப்புக்குழுவிற்கான அறையில் தொலைக்காட்சிப்பெட்டிகள் வைக்கப்பட்டுள்ளது. இதில் கரூர் மாவட்டத்தில் ஒளிபரப்பாகும் கேபிள் டிவி சேனல்கள் மற்றும் இதர சேனல்களும் 24 மணிநேரமும் சுழற்சி முறையில் அலுவலர்கள் மூலம் கண்காணிக்கப்படும். கேபிள் டி.விக்களில் அரசியல் கட்சியினர் விளம்பரம் செய்ய விரும்பினால் முன்னதாகவே ஊடக சான்றளிப்பு மற்றும் கண்காணிப்புக்குழுவில் அந்த வீடியோவை அளித்து ஒப்புதல் பெற வேண்டும். கேபிள் டிவி சேனல்கள் மற்றும் இதர சேனல்களில் ஒளிபரப்பப்படும் அரசியல் கட்சிகளின் விளம்பரங்கள் ஒவ்வொரு நாளும் எத்தனை முறை ஒளிபரப்பப்படுகின்றது என்பது கணக்கெடுக்கப்பட்டு, கணக்கீட்டுக் குழுவிடம் அறிக்கை சமர்ப்பிக்கப்படும். அதனடிப்படையில் சம்மந்தப்பட்ட வேட்பாளர்களின் செலவுக்கணக்கில் விளம்பரத்திற்கான செலவு சேர்க்கப்படும் என்றார்.
ஆய்வின்போது மாவட்ட வருவாய் அலுவலர்(நிலமெடுப்பு) சிவபிரியா, மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (பொது)செல்வசுரபி, தேர்தல் பிரிவு வட்டாட்சியர் சிவக்குமார் மற்றும் பலர் உடனிருந்தனர்.