கரூர் அருகே கார் மீது வேன் மோதியதில் முதியவர் உயிரிழந்தார். மேலும் 4 பேர் காயமடைந்தனர்.
தஞ்சை மாவட்டம், திருமால்குடியைச் சேர்ந்தவர் முகமதுஆரீப்(65). இவர் தனது காரில் மனைவி மெகரூனிஷா(62), மகன் சாகுல்அமீது(34), மகள் ரெகனாபர்வீன்(36) ஆகியோருடன் வியாழக்கிழமை இரவு கோவைக்குகாரில் சென்றார்.இந்த காரை இவரது உறவினர் பாபநாசம் சாதிக்பாட்ஷா (44) ஓட்டிச் சென்றார்.
இவர்கள் சென்ற கார் கரூர்-கோவைச்சாலையில் மொச்சக்கொட்டாம்பாளையம் பகுதியில் சென்ற போது, எதிரில் கோவையிலிருந்து கரூர் நோக்கி வந்த வேன் மோதியது. இதில் நிகழ்விடத்திலேயே முகமது ஆரீப் உயிரிழந்தார். மெகரூனிஷா உள்பட 4 பேரும் பலத்த காயமடைந்து கரூர் தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். இதுகுறித்து கரூர் நகரக் காவல் நிலையத்தினர் வழக்குப்பதிந்து, திண்டுக்கல் மாவட்டம், டி. கூடலூரைச் சேர்ந்த வேன் ஓட்டுநர் ரமேஷ்குமாரைத் தேடி வருகின்றனர்.