தன்னம்பிக்கை, ஈடுபாடு, விருப்பம் இருந்தால் இலக்கை அடையலாம்

 தன்னம்பிக்கை, ஈடுபாடு, பிடித்த விஷயத்துடன் செயலைச் செய்தல் ஆகிய மூன்றும் ஒரே நேர்கோட்டில் அமையும்போது நினைத்த இலக்கை


 தன்னம்பிக்கை, ஈடுபாடு, பிடித்த விஷயத்துடன் செயலைச் செய்தல் ஆகிய மூன்றும் ஒரே நேர்கோட்டில் அமையும்போது நினைத்த இலக்கை எளிதில் அடைய முடியும் என்றார் பெங்களூரு விர்டூஸா மென்பொருள் நிறுவனத்தின் மனிதவள முதுநிலை இயக்குநர் சந்திரசேகர் சென்னியப்பன்.
கரூர் தளவாபாளையம் எம்.குமாராசாமி பொறியியல் கல்லூரியில் சனிக்கிழமை நடைபெற்ற 15 ஆவது பட்டமளிப்பு விழாவில் சிறப்பு விருந்தினராகப் பங்கேற்று 812 மாணவ, மாணவிகளுக்கு பட்டங்களை வழங்கி மேலும் அவர் பேசியது: 
தாயின் கருவறையில் இருந்து வெளியே வந்தது போல புதிய உலகத்திற்கு வந்துள்ளீர்கள்.  நிறையபேர் சொந்த ஊரை விட்டு வெளியூர் சென்று பணியாற்றுவீர்கள்.  வெளியூர் சென்றுள்ள உங்களுக்கு சுதந்திரம் கிடைத்துள்ளது. இந்த சுதந்திரத்தை நல்லவிதமாக முழுமையாக பயன்படுத்திக் கொள்ளுங்கள். ஒருவரின் வாழ்வின் வெற்றிக்கு தன்னம்பிக்கை முதலில் அவசியம்.  பிடித்த விஷயத்தை மட்டும் விரும்பி செய்யும்போது அதில் ஈடுபாடு தானாக கிடைக்கும். ஈடுபாட்டுடன் ஒரு செயலை செய்யும்போது நல்ல பலன் எளிதில் கிடைக்கும். தன்னம்பிக்கை, ஈடுபாடு, பிடித்த விஷயத்துடன் செயலைச் செய்தல் ஆகிய மூன்றும் ஒரே நேர்கோட்டில் அமையும்போது நினைத்த இலக்கை எளிதில் அடைய முடியும். வாழ்வில் பணம் ஒரு பகுதிதான். பணத்தை மட்டும் வாழ்வில் இலக்காக நகர்ந்து சென்றால் நாம் சந்தோஷத்தை இழந்து விடுவோம். வெற்றி என்பது சந்தோஷத்தில்தான் கிடைக்கிறது. 
புதுப்புது விஷயங்களை நாள்தோறும் கற்றுக்கொண்டே இருக்க வேண்டும் என்ற உந்துதல் எப்போதும் எண்ண ஓட்டத்தில் இருந்துகொண்டே இருக்க வேண்டும். அப்போதுதான் அந்நிறுவனம் உங்களை திரும்பிப்பார்க்கும்.  திறமைகளை வளர்த்துக்கொள்ள பொறுமை மிகவும் அவசியம்.
மன வலிமை, உடல்நலம், யோசிக்கும் திறன் இருந்தால் மட்டுமே திறமையானவர்களாக ஜொலிக்க முடியும்.  நல்ல முறையில் செல்வம் ஈட்டினால் மட்டும்போதாது. அந்த செல்வத்தினால் சமூகத்திற்கும், உங்களது குடும்பத்திற்கும் நல்ல முறையில் பயன்படக்கூடியதாக இருக்க வேண்டும்.  பெற்றோர்களை முதியோர் இல்லத்திற்கு அனுப்பிவிடாதீர்கள். இந்த சமூகத்திற்கும், நாட்டுக்கும் உங்களால் என்ன செய்ய முடியுமோ அதை இயன்ற அளவு செய்யுங்கள் என்றார்.
விழாவிற்கு கல்லூரியின் தலைவர் எம்.குமாரசாமி தலைமை வகித்தார். கல்லூரி முதல்வர் என்.ரமேஷ்பாபு வரவேற்றார். 
கல்லூரியின் செயலர் கே. ராமகிருஷ்ணன், அறங்காவலர் விஜயா ராமகிருஷ்ணன், நிர்வாக இயக்குநர் எஸ்.குப்புசாமி உள்ளிட்டோர் முன்னிலை வகித்தனர். விழாவில் கல்லூரி மாணவ, மாணவிகள், பேராசிரியர்கள், பெற்றோர்கள் உள்ளிட்டோர் திரளாகப் பங்கேற்றனர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com