கரூர் அரசு காலனி தங்கராஜ் நகர் செல்வவிநாயகர் கோயிலில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற கும்பாபிஷேக விழாவில் பக்தர்கள் திரளாகப் பங்கேற்றனர்.
கரூர் மாவட்டம் பஞ்சமாதேவி அருகே உள்ள அரசு காலனி தங்கராஜ் நகரில் செல்வவிநாயகர் கோயில் சீரமைக்கப்பட்டு கும்பாபிஷேகம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. கும்பாபிஷேகத்தை முன்னிட்டு சனிக்கிழமை காலை அனுக்ஞை, விநாயகர் வழிபாடு, புண்யாகம், கணபதி ஹோமம், தீபாராதனை உள்ளிட்ட பூஜைகளும் நடைபெற்றன.
தொடர்ந்து பக்தர்கள் காவிரி ஆற்றுக்குச் சென்று புனித நீர் எடுத்து வந்து சுவாமிக்கு அபிஷேகம் செய்யும் நிகழ்ச்சியும் நடைபெற்றது.
இதையடுத்து மாலையில் மங்கள இசை, மங்கள கணபதி வழிபாடு, அங்குரம், ரக்ஷபந்தனம், கும்பஅலங்காரம், முதற்கால யாகபூஜையும் நடைபெற்றது. இரவு அஷ்டபந்தன மருந்து சாத்துதல் நிகழ்வும் நடைபெற்றது.
தொடர்ந்து ஞாயிற்றுக்கிழமை அதிகாலை 4.30 மணிக்கு நாடிசந்தானம், காயத்திரிஹோமம், இரண்டாம் கால யாக பூஜையும், 7.30 மணிக்குள் கடம் புறப்பாடு மற்றும் கோயில் கலசத்திற்கு புனித நீர் ஊற்றும் நிகழ்ச்சி நடைபெற்றது. சிவாச்சாரியார்கள் கோயில் கலசத்திற்கு புனித நீர் ஊற்றினர்.
பின்னர் புனிதநீர் பக்தர்கள் மேல் தெளிக்கப்பட்டது. தொடர்ந்து அன்னதானம் வழங்கப்பட்டது. விழாவில் பக்தர்கள் திரளாகப் பங்கேற்றனர்.