கரூர் மாவட்டம், குளித்தலை அருகே இலங்கை நாட்டைச் சேர்ந்தவரிடம் இருந்து ரூ. 1.40 லட்சம் மதிப்புள்ள 1800 யூரோ நோட்டுகளை தேர்தல் பறக்கும்படையினர் ஞாயிற்றுக்கிழமை பறிமுதல் செய்தனர்.
தமிழகத்தில் மக்களவை பொதுத்தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலில் உள்ளதால் உரிய ஆவணங்கள் இன்றி ரூ.50,000க்கு மேல் பணம் கொண்டு செல்லக் கூடாது என்றும், அதற்கு மேல் கொண்டு செல்பவர்கள் அதற்கான உரிய ஆவணத்தை கையில் வைத்திருக்க வேண்டும் என தேர்தல் ஆணையம் அறிவுறுத்தியுள்ளது. தொடர்ந்து, 24 மணிநேரமும் சுழற்சி முறையில் கண்காணிப்பு பணிகள் நடைபெற்று வருகின்றன.
இந்நிலையில், குளித்தலை அருகே கரூர் - திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் கொரப்பாளையம் என்ற இடத்தில் ஞாயிற்றுக்கிழமை வேணாண் துறை உதவி இயக்குநர் ஜெயபிரகாஷ் தலைமையிலான நிலையான கண்காணிப்பு குழுவினர் வாகனத் தணிக்கையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அவ்வழியே காங்கயம் நோக்கிச் சென்ற காரை மறித்து சோதனையிட்டனர்.
அப்போது காரில் இலங்கை நாட்டைச் சேர்ந்த அலஞ்சோன்(35) என்பவர் தனது குடும்பத்தினருடன் இருந்தார். சோதனையின்போது, உரிய ஆவணங்களின்றி பிரான்ஸ் நாட்டு பணம் ரூ. 1,800 யூரோக்கள் இருப்பது கண்டறியப்பட்டு அவை பறிமுதல் செய்யப்பட்டது. அலஞ்சோன் பிரான்சு நாட்டில் வேலை பார்ப்பதாகவும், இலங்கையில் இருந்து திருச்சி வந்து அங்கிருந்து உறவினருடன் காங்கயத்தில் உள்ள கிறிஸ்தவ ஆலயத்திற்குச் சென்றபோது தனிப்படையினர் யூரோ நோட்டுக்களைப் பறிமுதல் செய்தது தெரியவந்தது. 1800 யூரோ நோட்டுக்கள் இந்திய மதிப்பில் 1,40,400 ஆகும். பணத்தைப் பறிமுதல் செய்த கண்காணிப்புக் குழுவினர் அவற்றை குளித்தலை தொகுதிக்கான உதவி தேர்தல் நடத்தும் அலுவலர் எம்.லியாகத்திடம் ஒப்படைத்தனர்.