கரூர் அரசு கலைக் கல்லூரியில் முன்னாள் ராணுவத்தினரின் வாரிசுகள் உள்பட சிறப்பு பிரிவினருக்கு புதன்கிழமை கலந்தாய்வு நடைபெற்றது.
கரூர் அரசு கலைக் கல்லூரியில் 2019-20 ஆம் கல்வியாண்டில் பட்டப்படிப்பிற்கான மாணவர் சேர்க்கை கலந்தாய்வு புதன்கிழமை துவங்கியது. கலந்தாய்வினை கல்லூரியின் முதல்வர் (பொ) முனைவர் அர.ரவிச்சந்திரன் துவக்கி வைத்தார். முதல் நாளான புதன்கிழமை முன்னாள் ராணுவத்தினரின் வாரிசுகள், தேசிய மாணவர்படை, விளையாட்டுத்துறை மற்றும் மாற்றுத்திறனாளிகள் ஆகியோருக்கான சிறப்பு பிரிவினருக்கான கலந்தாய்வு புதன்கிழமை நடைபெற்றது. இந்தக் கலந்தாய்வில், முன்னாள் ராணுவத்தினரின் வாரிசுகள் 4 பேரும், தேசிய மாணவர் படையில் ஒருவரும், மாற்றுத்திறனாளிகள் 14 பேரும், விளையாட்டுத் துறையில் சிறப்பிடம் பிடித்தவர்கள் 38 பேரும் என மொத்தம் 57 மாணவ, மாணவிகள் சேர்க்கப்பட உள்ளனர். தொடர்ந்து வெள்ளிக்கிழமை தமிழ், ஆங்கில மொழி பாடங்களுக்கும், 20, 21 ஆம் தேதிகளில் அறிவியல் பிரிவுகளுக்கும், 24 ஆம் தேதி கலை மற்றும் வணிகவியல் பாடப்பிரிவுகளுக்கும் கலந்தாய்வு நடைபெற உள்ளது. கலந்தாய்வை கல்லூரியின் பேராசிரியர்கள், பேராசிரியைகள் உள்ளிட்டோர் நடத்தினர்.