கமல்ஹாசனுக்கு எதிராக ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட இந்து முன்னணியினர் 44 பேரைப் போலீஸார் கைது செய்தனர்.
நடிகர் கமல்ஹாசன் அண்மையில் அரவக்குறிச்சி பள்ளப்பட்டியில் மக்கள் நீதிமய்யம் கட்சி வேட்பாளர் மோகன்ராஜை ஆதரித்து பேசியபோது, இந்து மதத்தை இழிவாகப் பேசியது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. இந்து முன்னணியினர் அவர் பிரசாரம் செய்யும் இடங்களில் தடுத்து நிறுத்துவோம் எனத் தெரிவித்திருந்தனர்.
இந்நிலையில், கரூர் மாவட்டம் வேலாயுதம்பாளையத்தில் வியாழக்கிழமை இரவு மக்கள் நீதிமய்யம் கட்சி சார்பில் வேட்பாளர் பிரசார பொதுக்கூட்டம் நடைபெற்றது. கூட்டம் நடைபெறும் முன் இரவு 7 மணியளவில் திருச்சி கோட்டத் தலைவர் கனகராஜ் தலைமையில் இந்து முன்னணியினர் வேலாயுதம்பாளையம் ரவுண்டானா பகுதியில் திடீரென ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இதில் மாநில பொருளாளர் சண்முகசுந்தரம் சிறப்புரையாற்றினார். இதில் கரூர் மாவட்டத் தலைவர் கேவி.ராமகிருஷ்ணன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
தகவலறிந்து அங்கு வந்த வேலாயுதம்பாளையம் போலீஸார் அவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி, உடனே கலைந்து போகுமாறு கூறினர். ஆனால் அவர்கள் கலைந்து செல்லாததால் 5 பெண்கள் உள்பட 44 பேரைக் கைது செய்தனர்.