மக்கள் குறைதீர்க்கும் கூட்டத்தில் பெறப்படும் மனுக்களுக்கு உடனுக்குடன் நடவடிக்கை எடுத்து தீர்வு காணுமாறு அதிகாரிகளுக்கு கரூர் மாவட்ட ஆட்சியர் த.அன்பழகன் திங்கள்கிழமை அறிவுறுத்தினார்.
மக்களவை மற்றும் சட்டப்பேரவைக்கான இடைத்தேர்தல்கள் நடந்து முடிந்த நிலையில் தேர்தல் விதிமுறைகள் விலக்கிக் கொள்ளப்பட்டதையடுத்து, கரூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் ஆட்சியர் த.அன்பழகன் தலைமையில் மக்கள் குறைதீர்க்கும் கூட்டம் நடைபெற்றது. கூட்டத்திற்கு, தலைமை வகித்து குறைதீர்க் கூட்ட மனுக்களை பரிசீலனை செய்து சம்பந்தப்பட்ட துறை அலுவலர்களுக்கு அனுப்பி வைத்தார். பின்னர் ஆட்சியர் த.அன்பழகன் கூறுகையில் முதலமைச்சரின் தனிப்பிரிவு மனுக்கள், அமைச்சர் பெருமக்களின் முகாம் மனுக்கள் ஆகியவற்றின் மீது தனிக்கவனம் செலுத்தி உடனுக்குடன் நடவடிக்கை எடுங்கள். மாவட்ட உயர் அதிகாரிகள் நடத்தும் மனுநீதி நாள் முகாம் மனுக்கள், அம்மா திட்ட முகாமில் பெறப்படும் மனுக்கள் மீதும் உடனுக்குடன் உரிய விசாரணை நடத்தி காலதாமதம் இல்லாமல் நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் ஆட்சியர் அதிகாரிகளைக் கேட்டுக் கொண்டார்.
முகாமில், முதியோர் உதவித்தொகை, விதவை உதவித் தொகை, புதிய குடும்ப அட்டை, கல்விக்கடன் மற்றும் தொழில்கடன் என்பன உள்ளிட்ட மொத்தம் 112 மனுக்கள் வரப்பெற்றன. நிகழ்ச்சியில், மாவட்ட வருவாய் அலுவலர் சூரியபிரகாஷ், ஆட்சியரின் நேர்முக உதவியாளர்(பொது)செல்வசுரபி, மாவட்ட வழங்கல் அலுவலர் மல்லிகா உள்ளிட்ட அரசு அலுவலர்கள் பலரும் கலந்து கொண்டனர்.