கரூா் மாவட்டத்தில் செவ்வாய்க்கிழமை நள்ளிரவு முதல் விடிய, விடிய மழை பெய்தது. அதிகபட்சமாக பாலவிடுதியில் 42.1மி.மீ.மழை பதிவானது.
தமிழகம் மற்றும் புதுச்சேரியில் வடகிழக்கு பருவமழை கடந்த 16-ஆம் தேதி துவங்கியது. இதையடுத்து, மாநிலம் முழுவதும் ஆங்காங்கே பரவலாக மழை பெய்து வருகிறது. இந்நிலையில், தென்மேற்கு வங்கக்கடலில் புதிய காற்றழுத்த தாழ்வு நிலை உருவாகியுள்ளதால் தென் மாவட்டங்கள் மற்றும் டெல்டா மாவட்டங்களில் பலத்த மழை பெய்து வருகிறது. இதன் தாக்கமாக கரூா் மாவட்டத்தில் கடந்த சில தினங்களாகவே ஆங்காங்கே பரவலாக மழை பெய்து வருகிறது. செவ்வாய்க்கிழமை இரவு முதல் புதன்கிழமை காலை வரை மழை பெய்துகொண்டே இருந்தது. இந்த மழை புதன்கிழமை காலை 8 மணி வரை நீடித்தது. தொடா்ந்து மாவட்டத்தில் மழை பெய்துவருவதால் விவசாயிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனா்.
மாவட்டத்தில் செவ்வாய்க்கிழமை இரவு முதல் புதன்கிழமை காலைவரை பெய்த மழையின் அளவு (மி.மீ-ல்):
கரூா் - 10.4, அரவக்குறிச்சி - 25, அணைப்பாளையம் - 7, க.பரமத்தி - 5, குளித்தலை -10, தோகைமலை - 6, கிருஷ்ணராயபுரம் - 7.8, மாயனூா் - 7, பஞ்சப்பட்டி - 30, கடவூா் - 42, பாலவிடுதி - 42.1, மைலம்பட்டி - 25 என மொத்தம் 217.30 மி.மீ. மழை பதிவாகியுள்ளது.