கரூரில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற மாவட்ட அளவிலான சிலம்பம் போட்டியில் வென்ற வீரர்கள், வீராங்கனைகளுக்கு சான்றிதழ் மற்றும் கேடயங்கள் வழங்கப்பட்டன.
கரூரில் தமிழ்நாடு சிலம்பாட்டக்கழகம் சார்பில் மாவட்ட அளவிலான சிலம்பம் போட்டிகள் ஞாயிற்றுக்கிழமை காந்திகிராமம் லார்ட்ஸ் பார்க் பள்ளியில் நடைபெற்றது. போட்டியை, மாவட்ட சிலம்பாட்டக் கழகத் தலைவர் முன்னாள் எம்எல்ஏ மலையப்பசுவாமி துவக்கி வைத்தார். இதில் 10, 14, 17 மற்றும் 30 வயதுக்குட்பட்ட வீரர், வீராங்கனைகள் பங்கேற்றனர்.
தொடுதிறன் மற்றும் தனித்திறன் என இருபிரிவுகளாகப் போட்டிகள் நடத்தப்பட்டன. இதில் மாவட்டம் முழுவதும் இருந்து 200-க்கும் மேற்பட்ட வீரர்கள் கலந்துகொண்டு தங்களது திறமையை வெளிப்படுத்தினர். தொடர்ந்து வெற்றிபெற்றவர்களுக்கு பரிசுகள் வழங்கும் விழா மாலையில் நடைபெற்றது. விழாவிற்கு, சிலம்பாட்ட கழகச் செயலாளர் எம்.கிருஷ்ணமூர்த்தி தலைமை வகித்தார். இதில் வெற்றிபெற்றவர்களுக்கு பரிசு மற்றும் கேடயங்களை சிலம்பாட்ட கழகத்தலைவர் மலையப்பசுவாமி மற்றும் தாந்தோணிமலை காவல் நிலைய உதவி ஆய்வாளர் காளிமுத்து ஆகியோர் வழங்கினர். விழாவில் போட்டி இயக்குநர் எம்.வீரமணி மற்றும் சிலம்பம் பயிற்சியாளர்கள், வீரர்கள், வீராங்கனைகள் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.