கரூரில் மூதாட்டியிடம் 7 பவுன் தாலிச் சங்கிலியைப் பறித்துச்சென்ற மர்ம நபர்களைப் போலீஸார் தேடிவருகின்றனர்.
கரூர் தாந்தோணிமலையைச் சேர்ந்தவர் ஆறுமுகம் (60). விவசாயி. இவரது மனைவி செல்லம்மாள்(55). தம்பதி இருவரும் கரூரில் உள்ள உழவர் சந்தைக்கு ஞாயிற்றுக்கிழமை அதிகாலையில் 2 மணியளவில் கீரைக்கட்டு கொடுத்துவிட்டு மீண்டும் வீட்டுக்கு பைக்கில் சென்றனர். வீட்டின் முன் பைக்கை நிறுத்தியதும், பின்னால் பைக்கில் வந்த மர்ம நபர், செல்லம்மாள் அணிந்திருந்த 7 பவுன் தாலிச் சங்கிலியைப் பறித்துள்ளான். அப்போது அவனை ஆறுமுகம் பிடிக்க முயன்றபோது, அவரது செல்பேசியை கீழே போட்டுவிட்டு பைக்கில் நகையுடன் தப்பி ஓடிவிட்டான். ஆறுமுகம் தாந்தோணிமலை காவல் நிலையத்தில் அளித்த புகாரின் பேரில் போலீஸார் வழக்குப்பதிந்து மர்மநபரைத் தேடி வருகின்றனர்.