சின்னதாராபுரத்தில் தொழிலாளி அடித்துக் கொலை: 3 பேர் கைது
By DIN | Published On : 11th September 2019 08:41 AM | Last Updated : 11th September 2019 08:41 AM | அ+அ அ- |

சின்னதாராபுரத்தில் தொழிலாளி கட்டையால் அடித்துக் கொலை செய்யப்பட்டார். இதுதொடர்பாக ஊர் கொத்துக்காரர் உள்பட 3 பேரை போலீஸார் கைது செய்தனர்.
கரூர் மாவட்டம் அரவக்குறிச்சியை அடுத்த சின்னதாராபுரத்தைச் சேர்ந்தவர் தண்டபாணி (48), தொழிலாளி. இவர் கடந்த சில மாதங்களுக்கு முன் அதே பகுதியைச் சேர்ந்த மாயவன் (38) என்பவரின் மனைவியை கேலி கிண்டல் செய்தாராம். இதனால் தண்டபாணிக்கும், மாயவனுக்கும் முன்விரோதம் இருந்தது.
இந்நிலையில் ஊர்கொத்துக்காரரான அதே பகுதியைச் சேர்ந்த நல்லதம்பியையும் (54) தண்டபாணி குடிபோதையில் அண்மையில் திட்டினாராம். இதனால் தண்டபாணியை மாயவன் மற்றும் நல்லதம்பி ஆகியோர் சேர்ந்து தீர்த்துக் கட்டுவது என முடிவு செய்தனர். இந்நிலையில் தண்டபாணி திங்கள்கிழமை இரவு மதுக்குடித்துவிட்டு போதையில் மலைச்சியூர் பிரிவு சாலையில் நடந்து வந்தபோது எதிரே போதையில் ஊர் கொத்துக்காரர் நல்லதம்பி, மாயவன், இவர்களது நண்பர் அதே பகுதியைச் சேர்ந்த வேல்முருகன்(40) ஆகியோர் வந்துள்ளனர். அப்போது அவர்களுக்கிடையே தகராறு ஏற்பட்டுள்ளது.
இதில் ஆத்திரமடைந்த மாயவன், நல்லதம்பி, வேல்முருகன் ஆகியோர் சேர்ந்து அருகில் கிடந்த விறகுக் கட்டையால் தண்டபாணியை தாக்கிவிட்டு ஓடி விட்டனர்.
ரத்த வெள்ளத்தில் மிதந்த தண்டபாணியை அருகில் இருந்தவர்கள் மீட்டு கரூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பினர். ஆனால் வரும் வழியிலேயே அவர் இறந்தார். இதுகுறித்து தண்டபாணியின் மகன் மாரீஸ்வரன் அளித்த புகாரின்பேரில் சின்னதாராபுரம் போலீஸார் வழக்குப்பதிந்து மாயவன் உள்ளிட்ட 3 பேரையும் தேடி வருகின்றனர்.