கரூரில் செவ்வாய்க்கிழமை நள்ளிரவில் இடி மின்னலுடன் பெய்த பலத்த மழையால் விவசாயிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.
பல்வேறு மாநிலங்களில் வடகிழக்கு பருவமழை பெய்துவரும் நிலையில், தமிழகத்திலும் ஆங்காங்கே மழை பெய்கிறது. ஆனால் கரூர் மாவட்டத்தில் மட்டும் வழக்கம்போல பகலில் கோடை காலம் போன்றுகடுமையான வெயிலும், இரவு நேரங்களில் சில இடங்களில் தூறலுடன் கூடிய மழையும் பெய்து வருகிறது. இந்நிலையில் செவ்வாய்க்கிழமை காலை வெயில் மக்களை வாட்டி வதைத்த நிலையில் நள்ளிரவு 11.30 மணியளவில் திடீரென மழை பெய்யத்தொடங்கியது. வேகம் அதிகரித்து இடிமின்னலுடன் பலத்த மழையாக மாறியது. இதனால் சாலைகளில் மழைநீர் வெள்ளம்போல கரைபுரண்டு ஓடியது.
கரூர் பேருந்து நிலையத்தில் இருந்து வெளியேறிய பேருந்துகள் மற்றும் நகரின் முக்கியச் சாலைகளில் சென்ற வாகனங்கள் முகப்பு விளக்கை எரியவிட்டு ஊர்ந்தவாறு சென்றன. புதன்கிழமையும் வழக்கம்போல பகலில் வெயிலின் தாக்கம் அதிகமாக காணப்பட்டது. இந்நிலையில் இரவு 7 மணியளவில் கரூரில் திடீரென தூறலுடன் கூடிய மழை பெய்தது.
கரூர் மாவட்டத்தில் செவ்வாய்க்கிழமை இரவு பெய்த பலத்த மழையானது தற்போது காவிரி ஆற்றை நம்பி பயிரிட்டுள்ள விவசாயிகளுக்கு இந்த மழை பயிரின் வளர்ச்சிக்கு ஊக்குவிக்கும் என்பதால் விவசாயிகள் மிகுந்த மகிழ்ச்சியடைந்துள்ளனர்.