"மறைந்துபோன கலைகள் இருந்தால் உயிர்ப்பிக்கப்படும்'

மறைந்து போன கலைகள் குறித்து தகவல் இருந்தால் அவை உயிர்ப்பிக்கப்படும் என்றார் கலை பண்பாட்டுத் துறையின் இணை இயக்குநர் ச. சூர்யபிரகாஷ்.

மறைந்து போன கலைகள் குறித்து தகவல் இருந்தால் அவை உயிர்ப்பிக்கப்படும் என்றார் கலை பண்பாட்டுத் துறையின் இணை இயக்குநர் ச. சூர்யபிரகாஷ்.
கரூர் விநாயகா சதுரங்க கழகம் சார்பில் செவ்வாய்க்கிழமை கரூரில் நடைபெற்ற செஸ் போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசளிப்பு விழா சாரதா நிகேதன் மகளிர் கல்லூரியில் நடைபெற்றது. 
கரூர் மாவட்ட செஸ் அசோசியேசன் தலைவர் அட்லஸ் எம். நாச்சிமுத்து தலைமை வகித்தார். மோனிகா கிராபிக்ஸ் கார்த்தி, மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக் குழு உறுப்பினர் டாக்டர் சிவகுமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர். 
காந்திகிராமம் விஜயலட்சுமி இன்டர்நேஷனல் பள்ளி முதல்வர் கார்த்திகா லட்சுமி வரவேற்றார். விளையாட்டுப் போட்டியில் வெற்றிபெற்ற மாணவர்களுக்கு கோப்பை, சான்றிதழ் வழங்கி தமிழ்நாடு கலை மற்றும் பண்பாட்டுத் துறை இணை இயக்குநர் ச. சூர்யபிரகாஷ் பேசியது:
கரூர் மாவட்டம் எப்போதும் சமுதாய ஒற்றுமைக்கும்,  கல்வி,  ஆன்மிகம் போன்றவற்றில் முன் நிற்கக்கூடிய மாவட்டமாகும்.  மூளைக்கு வேலை கொடுக்கக்கூடியது என கூறப்படும் செஸ் போட்டியில் வெற்றி பெற்றவர்கள் முதன்மையானவர்கள் என்று உறுதி செய்யப்பட்டாலும்,  வெற்றி வாய்ப்பை இழந்தவர்கள் நாளைய வெற்றிக்குரியவர்கள் என்பதை மனதில் கொள்ள வேண்டும். தமிழ்நாட்டின் பாரம்பரிய கலைகள் மிகவும் தொன்மையானவை. நூற்றுக்கணக்கான கலைகள் தமிழகத்தில் மறைந்து போயுள்ளன. அப்படிப்பட்ட கலைகள் மீண்டும் வெளிக்கொணரப்பட வேண்டும். மறைந்து போன கலைகள் குறித்து கலை பண்பாட்டுத் துறைக்கு தெரிவித்தால், அந்த கலைகள் மீண்டும் உயிர்ப்பிக்கப்படும்.  உலக அரங்கில் தமிழ்நாட்டின் கலை, பண்பாடு, கலாசாரத்தை முழுமையாக வெளிக்கொண்டு வரும் பணி விரைவுபடுத்தப்பட்டுள்ளது.  
ஒவ்வொரு மாவட்டங்களிலும் பாரம்பரியமிக்க பல்வேறு கலைகள் மறக்கடிக்கப்பட்டுள்ளன. இதேபோன்று பழங்கால விளையாட்டுகளும்,  தற்போது மறைக்கப்படுகின்றன.  இவற்றையெல்லாம் முழுமையாக வெளிக்கொணர ஒவ்வொருவரும் பாடுபட வேண்டும்.  கிராமப்பகுதிகளில் உள்ள பழமையான கலைகள் மற்றும் மறைந்து போன கலைகள் இருப்பின் சென்னையில் உள்ள தமிழ்நாடு கலை பண்பாட்டு துறைக்கு அனுப்பி வைத்தால் மீண்டும் அக்கலைகள் உயிர்ப்பிக்கப்படும் என்றார் அவர்.  முன்னதாக விழாவில் கரூர் சாரதா நிகேதன் மகளிர் கல்லூரி செயலர் யதீஸ்வரி நீலகண்ட பிரிய அம்பா ஆசி வழங்கிப் பேசினார்.  கரூர் பரணி பார்க் கல்வி நிறுவனங்களின் முதன்மை முதல்வர் ராமசுப்ரமணியன்,எவர்கிரீன் பவுண்டேஷன் சேர்மன் ஸ்காட் தங்கவேல், கரூர் விநாயகா சதுரங்க கழக தலைவர் யக்னேஸ்வரன்,  காந்திகிராமம் நடுநிலைப்பள்ளி ஆசிரியர் திலகவதி மற்றும் பலர் பங்கேற்றனர். ஆசிரியர் அம்சவல்லி நிகழ்ச்சியை தொகுத்து வழங்கினார். கரூர் விநாயகா சதுரங்க கழக செயலாளர் செ.ரேவதி செல்லமுத்து நன்றி கூறினார்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com