வேலையில்லாத சிறுபான்மையினருக்கு இலவச திறன் வளர்ப்பு பயிற்சி முகாம் நடத்தப்பட உள்ளது.
தேசிய சிறுபான்மையினர் வளர்ச்சி மற்றும் நிதிக் கழகத்தின் நிதியுதவியுடன் கஷால் சீ குசால்தா திட்டத்தின் கீழ் டாம்கோ மூலம் படித்து வேலையில்லாத சிறுபான்மையின வகுப்பைச் சார்ந்த இளைஞர்களுக்கு காஞ்சிபுரம் மாவட்டம், வாலாஜாபாத்தில் செயல்படும் மத்திய காலணி பயிற்சி நிலையம் மூலம் இலவச திறன் வளர்ப்பு பயிற்சி வழங்கப்பட உள்ளது.
இத்திட்டத்தின் கீழ் ஸ்டிச்சர் கூட்ஸ் கார்மென்ட்ஸ் மற்றும் பிரி அசெம்பிளி ஆபரேட்டர் ஆகிய பயிற்சிகள் 46 நாட்கள் வழங்கப்படும். ஒவ்வொரு பயிற்சிக்கும் தலா 20 பேர் வீதம் மொத்தம் 40 பேருக்கு பயிற்சியளிக்கப்படும்.
பயிற்சியில் சேர சிறுபான்மையினர் வகுப்பைச் சேர்ந்த இஸ்லாமியர்கள், கிறிஸ்தவர்கள், புத்த மதத்தினர், சீக்கியர்கள், பார்சியர்கள் மற்றும் ஜெயின் பிரிவைச் சார்ந்தவர்கள் விண்ணப்பிக்கலாம். பயிற்சியாளரின் குடும்ப ஆண்டு வருமானம் ரூ. 5 லட்சத்திற்கு மிகாமலும், 18 முதல் 55 வயதிற்குட்பட்டவராகவும் இருத்தல் வேண்டும். பயிற்சியின்போது ஒரு பயனாளிக்கு ரூ. 1534 பயிற்சி உதவித்தொகை அளிக்கப்படும். உண்டு உறைவிடக் கட்டணம் ஏதும் வழங்கப்படாது.
இதற்கான நேர்காணல், காஞ்சிபுரம் மாவட்டம், வாலாஜாபாத், எண்.64சி, சாலை தெரு, புதேரி, குஜராத்சத்திரம் அருகில் செயல்படும் மத்திய காலணி பயிற்சி நிலையத்தில் வரும் 20-ஆம் தேதி காலை 10 மணி முதல் நடைபெற உள்ளது.
மேற்படி திட்டத்தின் கீழ் பயிற்சி பெற விரும்புவோர் அசல் சாதி சான்றிதழ், வருமானச் சான்றிதழ், ஆதார் அட்டை, கல்விச் சான்றிதழ் ஆகியவற்றுடன் நேர்காணலில் கலந்துகொள்ளலாம். மேலும், இதுதொடர்பான விவரங்களுக்கு கரூர் மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலர், மத்திய காலணி பயிற்சி நிலையம் (மனோகரன் - 8939813412), தமிழ்நாடு சிறுபான்மையினர் பொருளாதார மேம்பாட்டுக் கழகம், சென்னை, (தொலைபேசி - 044- 28514846) ஆகியோர்களை அணுகலாம்.