தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணியின் கரூர் மாவட்டக் குழு சார்பில் கல்விப் பாதுகாப்பு விழிப்புணர்வு வாகன பிரச்சார இயக்கப் பயணம் கரூரில் சனிக்கிழமை நடைபெற்றது.
கரூர் பேருந்து நிலையம் ஆர்எம்எஸ் அலுவலகம் முன் தொடங்கிய இந்த பிரசாரப் பயணத்திற்கு மாவட்டத் தலைவர் பெ.காளிதாஸ் தலைமை வகித்தார். மாவட்டச் செயலாளர் ஜெயராஜ் வரவேற்றார். தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணியின் மாநிலப் பொதுச் செயலாளர் ச.மயில் சிறப்புரையாற்றினார். சிஐடியு மாவட்டச் செயலாளர் சி.முருகேசன் பேரணியை துவக்கி வைத்துப் பேசினார்.
அரசு ஊழியர் சங்க மாவட்ட துணைத் தலைவர் கே.செல்லமுத்து, பிஎஸ்என்எல் ஓய்வூதியர் சங்கத்தின் ஐ.ஜான்பாட்ஷா, ஆசிரியர் கூட்டணியின் மாநில நிர்வாகிகள் வின்சென்ட், ஜீவன்ராஜ், சின்னசாமி, தமிழ்செல்வி ஆகியோர் வாழ்த்தி பேசினர். இதில் நூற்றுக்கும் மேற்பட்ட ஆசிரியர்கள் கலந்துகொண்டனர்.
தேசியக் கல்விக் கொள்கை 2019-ஐ திரும்பப்பெற வேண்டும், அரசு பள்ளிகளை மூடக்கூடாது, மூடிய பள்ளிகளை திறக்க வேண்டும், தமிழ் வழிப் பள்ளிகளை பாதுகாத்திட வேண்டும், தொடக்கக் கல்வித்துறையைச் சீரழிக்கும் அரசாணைகளை திரும்ப பெற வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி பிரசார பயணம் நடைபெற்றது.
இதேபோல குளித்தலை, க.பரமத்தி, கிருஷ்ணராயபுரம், தோகைமலை ஆகிய ஒன்றியங்களிலும் பிரசார பயணம் நடைபெற்றது.