கரூர் நகராட்சிக்கு உள்பட்ட பகுதிகளில் டெங்கு ஒழிப்பு பணிகள் குறித்து நகர்நல அலுவலர் சனிக்கிழமை திடீர் ஆய்வு மேற்கொண்டார்.
கரூர் நகராட்சியில் மொத்தம் 48 வார்டுகள் உள்ளன. இதில் 228 நகராட்சி பணியாளர்கள் டெங்கு ஒழிப்பு பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர். இவர்களில் 50 வீடுகளுக்கு ஒருவர் வீதம் டெங்கு கண்காணிப்பு பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர்.
இவர்கள் நல்ல தண்ணீர் தொட்டிகளில் டெங்கு தடுப்பு மருந்துகள் ஊற்றுவது, டெங்குவை உருவாக்கும் லார்வா புழுக்கள் இருப்பது கண்டறியப்பட்டால் உடனே பிளிச்சிங் பவுடர் ஊற்றி அவற்றை அழிப்பது, வீடுகளின் முன் அத்தியாவசியம் இல்லாத பழைய பொருள்கள் வைத்திருந்தால் அவற்றை அகற்றுமாறு கூறுதல், உரல்களில் மழைநீர் தேங்கியிருந்தால் அவற்றை அகற்றுதல் உள்ளிட்ட பணிகளை செய்து வருகின்றனர்.
இந்தப் பணிகளை நகராட்சி நகர்நல அலுவலர் ஸ்ரீபிரியா சனிக்கிழமை ஆய்வு செய்தார். அப்போது கரூர் பசுபதீஸ்வரர் கோயில் பகுதிகள் மற்றும் நல்லதங்காள் ஓடை உள்ளிட்ட பகுதிகளில் ஆய்வு நடைபெற்றது.
மேலும் டெங்கு கொசுக்கள் உற்பத்தியாகாத வகையில் பாத்திரங்களை மூடி வைத்திருக்க வேண்டும், தேங்காய் சிரட்டை, டயர்களில் மழைநீர் தேங்காத வகையில் கவனித்துக்கொள்ள வேண்டும் என பொதுமக்களிடம் அறிவுறுத்தினார். ஆய்வின்போது சுகாதார ஆய்வாளர் சித்தநாதன் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.