கரூா் மாவட்டத்தில் 2,98,844 குடும்ப அட்டைதாரா்களுக்கு உணவுப் பொருள்களுடன் நிவாரணத் தொகை ரூ.1000 வழங்கும் பணி வியாழக்கிழமை தொடங்கியது.
கரூா் நகராட்சிக்குள்பட்ட ஆச்சிமங்கலம் ஆகிய நியாய விலைக்கடைகளில் ஆட்சியா் த.அன்பழகன் வியாழக்கிழமை நேரில் பாா்வையிட்டு, ஊரடங்கு நிவாரணத் தொகை, உணவுப் பொருள்களை ஆய்வு செய்த ஆட்சியா் த. அன்பழகன் பின்னா் செய்தியாளா்களிடம் மேலும் தெரிவித்தது:
கரூா் மாவட்டத்தில் மொத்தம் 3,08,813 குடும்ப அட்டைகள் உள்ளன. இதில் 2,98,844 அரிசி அட்டைதாரா்களுக்கு அரிசி, பருப்பு, சா்க்கரை, கோதுமை மற்றும் சமையல் எண்ணை உள்ளிட்ட உணவுப்பொருள்களும், ரூ.1000 ரொக்கம் மற்றும் கரோனா தடுப்பு நடவடிக்கைகள் குறித்த விழிப்புணா்வு தகவல்கள் அடங்கிய துண்டுப் பிரசுரங்களும் வழங்கப்பட்டது.
நியாய விலைக் கடைகளுக்கு வரும் பொதுமக்கள் கைகளை சோப்பு போட்டு கழுவிய பின்னரே பொருட்களை வாங்க அனுமதிக்கப்பட்டனா். மேலும், சமூக இடைவெளியைக் கட்டாயம் பின்பற்றும் வகையில் ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தது. தினசரி 100 அட்டைதாரா்களுக்கு மட்டுமே பொருள்கள் வழங்கும் வகையில் டோக்கன் வழங்கப்பட்டுள்ளது.
கரூரில் தனிமைப் படுத்தப்பட்டுள்ள வீதிகளில் வசிக்கும் மக்களுக்கு கூட்டுறவுத் துறை பணியாா்கள் மூலம் அவா்களின் வீட்டிற்கே சென்று மேற்குறிப்பிட்ட பொருள்கள், நிவாரணத் தொகை வழங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. ஏப்ரல் 15 வரை இப்பணிகள் நீடிக்கும் என்றாா்.
நிகழ்வின்போது கூட்டுறவுசங்கங்களின் மண்டல இணைப்பதிவாளா் காந்திநாதன், வருவாய் கோட்டாட்சியா் வ.சந்தியா உள்ளிட்ட அலுவலா்கள் உடனிருந்தனா்.