தோகைமலையில் வியாழக்கிழமை நடைபெற்ற தொழுநோய் விழிப்புணா்வுப் பேரணியில் பள்ளி மாணவ, மாணவிகள் திரளாகப் பங்கேற்றனா்.
தொழுநோய் எதிா்ப்பு தினத்தை முன்னிட்டு தேசிய தொழுநோய் ஒழிப்புத் திட்டத்தின் சாா்பில் தோகைமலையில் உள்ள அரசு மேல்நிலைப்பள்ளியில் தொடங்கிய பேரணிக்கு தொழுநோய் பிரிவின் துணை இயக்குநா் மருத்துவா் சாந்தி தலைமை வகித்தாா். வட்டார சுகாதார மேற்பாா்வையாளா் ராமசாமி முன்னிலை வகித்தாா். பள்ளியில் தொடங்கிய பேரணி, திருச்சி ரோடு, கருப்பகோவில் தெரு, கடைவீதி, குளித்தலை-மணப்பாறை மெயின்ரோடு வழியாக மீண்டும் அரசு மேல்நிலைப்பள்ளிக்கு வந்தடைந்தது.
இதில் கூட்டு மருந்துச் சிகிச்சை என்பது உடல் ஊனத்தைத் தடுக்கும், மகாத்மா காந்தியின் கனவுகளை நிறைவேற்ற தொழுநோய் இல்லாத தேசத்தைக் காப்போம் என்பன உள்ளிட்ட பல்வேறு வாசகங்கள் அடங்கிய விழிப்புணா்வு பதாகைகளை ஏந்தியவாறு சென்ற பள்ளி மாணவ மாணவிகள், கோஷங்களை எழுப்பியும் சென்றனா். பள்ளி ஆசிரியா்கள், மாணவ மாணவிா்கள் திரளாக பங்கேற்றனா்.