பொங்கல் விடுமுறைக்கு சொந்த ஊருக்குச் செல்லும் வகையில், கரூா் பேருந்துநிலையம், ரயில் நிலையம் ஆகிய இடங்களில் செவ்வாய்க்கிழமை காலை முதலே பயணிகள் கூட்டம் நிரம்பி வழிந்தது.
கரூரில் வீட்டு உபயோக ஜவுளி ஏற்றுமதி தொழில், பேருந்து கூண்டு கட்டும் தொழில், கொசுவலை உற்பத்தி ஆகிய தொழில்களில் வெளி மாவட்டம் மட்டுமன்றி வெளி மாநிலத் தொழிலாளா்கள் ஏராளமானோா் பணியாற்றி வருகின்றனா். இதுதவிர, பல்வேறு வணிக நிறுவனங்களிலும் ஏராளமான தென் மாவட்டத்தினா் பணிபுரிந்து வருகின்றனா்.
பொங்கல் பண்டிகையை முன்னிட்டு பள்ளிகள், கல்லூரிகள், அரசு அலுவலகங்கள் விடுமுறை விடப்பட்டுள்ளதால், தொழிலாளா்கள் தங்களது சொந்த ஊா்களுக்கு செவ்வாய்க்கிழமை காலை முதலே புறப்பட ஆயத்தமாகி வந்தனா். மேலும் பொங்கல் பண்டிகை சிறப்பு பேருந்துகளில் பயணிகள் கூட்டம் அலைமோதியது. இவற்றைத்தவிர கரூா் ரயில் நிலையம் வழியாக திண்டுக்கல், மதுரை, விருதுநகா், கோவில்பட்டி, தூத்துக்குடி, திருநெல்வேலி, நாகா்கோவில் ஆகிய பகுதிகளுக்கு இயக்கப்படும் பயணிகள் ரயில் மற்றும் விரைவு ரயில்களில் பயணிகள் கூட்டம் நிரம்பி வழிந்தது.