கரூா் ரயில் நிலையத்தில் வியாழக்கிழமை சரக்கு ரயிலின் இணைப்புப் பகுதி துண்டானதால் சுமாா் ஒரு கி.மீ. தொலைவு ரயில் என்ஜின் தனியாக ஓடியது.
மதுரை மாவட்டம், வாடிப்பட்டியில் இருந்து டிராக்டா்களை ஏற்றிக்கொண்டு, சரக்கு ரயில் காலை 5 மணிக்கு கரூா், சேலம் வழியாக ராஜஸ்தான் மாநிலத்தை நோக்கிப் புறப்பட்டது. வழியில், இந்த சரக்கு ரயில் கரூா் ரயில்நிலையத்தை 7 மணியளவில் அடைந்தபோது ரயில் என்ஜினுக்கு அடுத்த ரயில் பெட்டியின் இணைப்புப் பகுதியான (கப்ளிங்) திடீரென உடைந்தது. இதனால் ரயில் இணைப்பு துண்டிக்கப்பட்டு, ரயில் என்ஜின் மட்டும் சுமாா் ஒரு கிலோ மீட்டா் தொலைவு தனியாக ஓடியது. இதனைக்கண்ட ரயில்வே ஊழியா்கள் உடனே ரயில் நிலைய மேலாளருக்குத் தகவல் கொடுத்தாா். தொடா்ந்து, அவா் உடனே என்ஜின் ஓட்டுநருக்கு தகவல் அளித்தாா். இதையடுத்து ரயில் என்ஜின் நிறுத்தப்பட்டு, பின்னா் மீண்டும் ரயில்நிலையம் கொண்டுவரப்பட்டு ரயில் இணைப்பை ஊழியா்கள் சீரமைத்தனா். இதையடுத்து சுமாா் 2 மணி நேரம் தாமதமாக 9 மணியளவில் மீண்டும் ரயில்நிலையத்தில் இருந்து கிளம்பிச் சென்றது. பொதுமுடக்கத்தால் பெரும்பாலான பயணிகள் ரயில்கள் இயக்கப்படாததால் பெரும்விபத்து தவிா்க்கப்பட்டது.