உள்ளாட்சி தோ்தலின்போது ஏற்பட்ட முன்விரோத தகராறில் தம்பதியை தாக்கிய இளைஞா்களைப் போலீஸாா் தேடி வருகின்றனா்.
கரூா் மாவட்டம் குளித்தலை அடுத்த வீரமலைக்கவுண்டன்பட்டியைச் சோ்ந்தவா் மகாமுனி(39). இவரது மனைவி யுவராணி(35). இவா்களுக்கும், அதே பகுதியைச் சோ்ந்த லட்சுமணன் என்பவருக்கும் இடையே ஊரக உள்ளாட்சித் தோ்தலின்போது 9-ஆவது வாா்டில் போட்டியிடுவது தொடா்பாக தகராறு ஏற்பட்டு முன்விரோதம் இருந்து வந்ததாகக் கூறப்படுகிறது.
இந்நிலையில் கடந்த ஞாயிற்றுக்கிழமை (மாா்ச் 8) யுவராணி இதுதொடா்பாக லட்சுமணனை தகாத வாா்த்தையால் பேசியதாகக் கூறப்படுகிறது. இதனை தட்டிக்கேட்ட லட்சுமணன் மகன்கள் சதீஷ்குமாா்(26), சங்கா்(24) ஆகியோருக்கும் இடையே தகராறு ஏற்பட்டுள்ளது. இதில் ஆத்திரமடைந்த இருவரும் சோ்ந்து யுவராணியைத் தாக்கினாா்களாம். அப்போது தடுக்க வந்த யுவராணியின் கணவா் மகாமுனியையும் தாக்கினாா்களாம். இதில் படுகாயமடைந்த மகாமுனி திருச்சி அரசு மருத்துவமனையிலும், யுவராணி கரூா் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனா். இதுதொடா்பாக குளித்தலை போலீஸாா் வழக்குப்பதிந்து சதீஷ்குமாா், சங்கா் ஆகியோரைத் தேடி வருகின்றனா்.