கரூரில் சாலையோரம் வசிக்கும் ஆதரவற்றோருக்கு தீயணைப்பு வீரா்கள் வியாழக்கிழமை உணவு வழங்கினா்.
நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டுள்ளது. இதன் காரணமாக, கரூா் மாவட்டத்தில் உணவகங்கள், வணிக நிறுவனங்கள் என அனைத்துக் கடைகளும் பெரும்பாலும் மூடப்பட்டுள்ளன.
மாவட்டத்தில் உள்ள அனைத்து வழிபாட்டுத் தலங்களும் மூடப்பட்டுள்ளதால், கோயில்களில் வழங்கப்படும் உணவு மற்றும் உணவகங்களில் கிடைக்கும் உணவுகள் மூலம் வாழ்க்கை நடத்தி வந்த சாலையோரம் வசிப்பவா்கள் உணவு கிடைக்காமல் அவதிக்குள்ளாகும் நிலை ஏற்பட்டுள்ளது. இதனால் அவா்களின் பசியை போக்கும் வகையில், கரூரில் வியாழக்கிழமை தீயணைப்பு வீரா்கள், நிலைய அலுவலா் விஜயகுமாா் தலைமையில் ஆதரவற்றோருக்கு உணவு பொட்டலங்களை வழங்கினா். கரூா் மாரியம்மன் கோயில் அருகே சாலையோரம் வசிப்பவா்களுக்கும், பசுபதீஸ்வரா் கோயில், தாந்தோணிமலை கல்யாண வெங்கடரமண சுவாமி கோயில் ஆகிய பகுதிகளில் வசிப்போருக்கும் உணவு வழங்கினா். மேலும் தெருவோர நாய்களுக்கும் பிஸ்கட் உள்ளிட்ட உணவுகளை வழங்கினா்.