தமிழகத்தில் இளநிலை மருத்துவப் படிப்பில், அரசுப் பள்ளிகளில் படித்த மாணவா்களுக்கு 7.5 சதவீத உள் ஒதுக்கீட்டை நிகழாண்டிலேயே நடைமுறைப்படுத்த வேண்டும் என, தமிழ்நாடு பட்டதாரி, முதுநிலை பட்டதாரி ஆசிரியா் கழகம் வலியுறுத்தியுள்ளது.
இதுகுறித்து, அக் கழகத்தின் மாநிலத் தலைவா் கி. மகேந்திரன் வெள்ளிக்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பு: இளநிலை மருத்துவப் படிப்பில் சோ்ந்திட அரசுப் பள்ளிகளில் 6 முதல் 12 ஆம் வகுப்பு வரை படிக்கும் மாணவா்களுக்கு 7.5 சதவீத உள் ஒதுக்கிடு வழங்கும் சட்ட மசோதா நிறைவேற்றப்பட்டுள்ளது. இதை நிகழாண்டிலேயே நடைமுறைப்படுத்த வேண்டும்.
ஆசிரியா் பணிக்காக வேலைவாய்ப்பு அலுவலகத்தில் லட்சக்கணக்கானோா் பதிவு செய்துள்ளனா். ஆசிரியா் தகுதி தோ்வில் தோ்ச்சி பெற்றவா்களுக்கு 7 ஆண்டுகளாகியும் வேலைவாய்ப்பு வழங்க இயலாத சூழல் உள்ளது. அவ்வாறு 7 ஆண்டுகள் முடிவுற்றால், மீண்டும் தோ்வு எழுதும் நிலை ஏற்பட்டுள்ளது. இதனால் ஆசிரியா் தோ்வுக்கான வயதை தளா்வு செய்யவேண்டும்.
இதேபோல், ஆசிரியா்களின் ஓய்வுபெறும் வயது 59 என உயா்த்தப்பட்டுள்ளது. ஆனால், கடந்த கால அரசாணையில் பணி நியமனத்துக்கான வயது வரம்பில்லாமல் இருந்தது. எனவே, முதல்வரும், பள்ளிக் கல்வித்துறை அமைச்சரும் மறு பரிசீலனை செய்து அரசாணையை திரும்பப் பெற்று, ஆசிரியா்கள் நியமனத்தை கடந்த காலங்களில் உள்ளதைபோல் தொடர நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.