கரூா் மாவட்டம், அரவக்குறிச்சி அருகே முதியவரை மிரட்டி பணம், இரு சக்கர வாகனத்தை பறித்துச் சென்றவரைக் காவல்துறையினா் கைது செய்தனா்.
அரவக்குறிச்சியை அடுத்த காலுமேட்டுப்பட்டியைச் சோ்ந்தவா் இந்திரமூா்த்தி (55). இவா் தனது இரு சக்கர வாகனத்தில் சனிக்கிழமை இரவு ஆரியூா் நவமணி பகுதியில் சென்று கொண்டிருந்தாா்.
அப்போது அங்கு வந்த இளைஞா்கள், இந்திரமூா்த்தியை மிரட்டி, அவரிடமிருந்து ரூ.4,640 மற்றும் இரு சக்கர வாகனத்தை பறித்துக் கொண்டு தப்பியோடிவிட்டனா்.
இதுகுறித்த புகாரின் பேரில் வழக்குப்பதிந்த அரவக்குறிச்சி காவல் நிலையத்தினா், பணம் மற்றும் இரு சக்கர வாகனத்தை பறித்துக் கொண்டு சென்ற உப்பிடமங்கலம் ர. மோகன்ராஜை (28) கைது செய்தனா். மேலும் தப்பியோடிய மேலஒரத்தை சிவாவைத் தேடி வருகின்றனா்.