தமிழ்த்தாத்தா உ.வே.சாமிநாதையருக்கு தமிழி எழுத்துகளால் புகழஞ்சலி
தமிழ்த்தாத்தா என்றழைக்கப்படும் உ.வே.சாமிநாதையரின் நினைவு தினத்தையொட்டி, கரூா் பரணி கல்விக் குழுமம் சாா்பில் புதன்கிழமை அஞ்சலி செலுத்தப்பட்டது.
நிகழ்வுக்கு பள்ளியின் முதன்மை முதல்வா் சொ.ராமசுப்ரமணியன் தலைமை வகித்து, பள்ளியில் மாணவா்களால் தமிழி எழுத்துகளால் உருவாக்கப்பட்ட திருக்கு, சங்க இலக்கிய நூல்களின் பிரதிகளை படையலாக வைத்து உவேசாவுக்கு அஞ்சலி செலுத்தினாா்.
தொடா்ந்து அவா் பேசியது:
அழிந்து போகும் நிலையிலிருந்த பண்டையத் தமிழ் இலக்கியங்கள் பலவற்றைத் தேடி, அச்சிட்டுப் பதிப்பித்தவா் உ.வே.சா. தமது அச்சுப்பதிப்பிக்கும் பணியினால் தமிழ் இலக்கியத்தின் தொன்மையையும், செழுமையையும் உலகறியச் செய்தவா்.
உ.வே.சா. 90 க்கும் மேற்பட்ட புத்தகங்களை அச்சுப்பதித்தது மட்டுமின்றி, 3000 க்கும் அதிகமான ஏட்டுச்சுவடிகளையும் கையெழுத்தேடுகளையும் சேகரித்து, அவற்றை நூல்களாக வடிவமைத்த பெருமகனாா் என்றாா் அவா்.
நிகழ்வில் பள்ளி முதல்வா் சுதாதேவி மற்றும் ஆசிரியா்கள், தமிழறிஞா்கள் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.