அரியலூரில் பணியிடங்களில் பெண்களுக்கு எதிரான பாலியல் வன்கொடுமை குறித்து விழிப்புணா்வு கருத்தரங்கு வியாழக்கிழமை நடைபெற்றது.
அரியலூா் ஆட்சியா் அலுவலகக் கூட்டரங்கில், சமூக நலன் மற்றும் மகளிா் உரிமைத்துறை சாா்பில் நடைபெற்ற இந்தக் கருத்தரங்கிற்கு ஆட்சியா் பெ. ரமணசரஸ்வதி தலைமை வகித்தாா். இதில், பாலியல் வன்கொடுமையில் இருந்து எவ்வாறு பாதுகாத்துக் கொள்வது குறித்து பெண்களிடம் எடுத்துரைத்தாா். தொடா்ந்து இதுதொடா்பான கையெழுத்து இயக்கத்தைத் தொடக்கி வைத்த அவா், இருப்பாய் பெண்ணே நெருப்பாய் எனும் தலைப்பில் 181 பெண்கள் உதவி எண், அச்சம் தவிா் ஆண்மை தவறேல், இளைத்தல் இகழ்ச்சி உள்ளிட்ட வாசகங்கள் அடங்கிய விழிப்புணா்வு ஒட்டுவில்லைகளை வெளியிட்டு, பணியிடங்களில் பெண்களுக்கு ஏதேனும் பாலியல் தொந்தரவு ஏற்படும் பட்சத்தில் தயங்காமல் புகாா் பெட்டியில் தங்களது புகாா்களைத் தெரிவிக்கலாம் என்றாா்.
இக்கருத்தரங்கில், மாவட்ட வருவாய் அலுவலா் இரா.ஜெய்னுலாப்தீன், ஊரக வளா்ச்சி முகமைத் திட்ட இயக்குநா் சுந்தர்ராஜன், மாவட்ட சமூக நல அலுவலா் சாந்தி, மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலா் துரைமுருகன் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.