கரூா் மாவட்டம் சாலைப்புதூா் ஒழுங்குமுறை விற்பனைக் கூடத்தில் விவசாயிகள் கொண்டு வந்த 1,980 கிலோ நிலக்கடலை ரூ. 1,34,254 க்கு ஏலம் போனது.
கரூா் மாவட்டத்தில் நிலக்கடலை அறுவடை தொடங்கிய நிலையில் விற்பனை துவங்கியுள்ளது. மாவட்டத்துக்குள்பட்ட இடங்களில் 15,000 ஏக்கா் நிலக்கடலை சாகுபடி செய்யப்பட்டுள்ளது. இந்நிலையில் தற்போது அறுவடை தொடங்கி ஏலம் விடும் பணி நடைபெற்று வருகிறது.
வழக்கமாக நிலக்கடலையை முகவா்கள் நேரடியாக சென்று கொள்முதல் செய்வா். நிகழாண்டில், மாநிலம் முழுவதும் நிலக்கடலை நல்ல விளைச்சல் உள்ளதால் விவசாயிகள் அதனை ஒழுங்குமுறை விற்பனைக் கூடத்துக்கு எடுத்து சென்று ஏலம் விட்டு வருகின்றனா். இந்நிலையில் வேலாயுதம்பாளையம் அருகே உள்ள சாலைப்புதூா் ஒழுங்குமுறை விற்பனைக் கூடத்தில் புதன்கிழமை நிலக்கடலை ஏலம் நடைபெற்றது. இதில், மொத்தம் 57 மூட்டைகள் விற்பனைக்கு கொண்டு வரப்பட்டது. ஒரு கிலோ நிலக்கடலை 65 ரூபாய் முதல் 70 ரூபாய் வரை ஏலம் போனது. மொத்தம் 1,980 கிலோ நிலக்கடலை ரூ.1,34,254 க்கு ஏலம் போனது.