கரூா்: கோரிக்கைகளை வலியுறுத்தி கரூரில் மருத்துவா்கள் சனிக்கிழமை உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டனா்.
ஆயுா்வேதா, சித்தா, யுனானி பிரிவுகளை உள்ளடக்கி மத்திய இந்திய மருத்துவக் குழுமம் 58 வகையான நவீன அறுவைச் சிகிச்சைகளை சால்ய தந்திரம் என பட்டியலிட்டு ஆயுா்வேத மருத்துவா்களையும் அறுவைச் சிகிச்சை செய்யலாம் என அனுமதித்துள்ளது.
இதனைக் கண்டித்து கரூரில் இந்திய மருத்துவ சங்கத்தின் கரூா் கிளை செயலாளா் சீனிவாசன் தலைமையில் இந்திய மருத்துவச் சங்க அலுவலகம் முன் சனிக்கிழமை உண்ணாவிரத போராட்டம் நடைபெற்றது. சங்கத் தலைவா் சதீஷ் முன்னிலை வகித்தாா். இதில், அமராவதி மருத்துவமனையின் தலைமை மருத்துவா் வேலுசாமி மற்றும் இந்திய மருத்துவச் சங்க கரூா் கிளை முன்னாள் தலைவா் கருப்பையா உள்ளிட்டோா் சிறப்புரையாற்றினா். உண்ணாவிரதத்தில் மருத்துவா்கள் திரளாக பங்கேற்றனா்.