கரூா்: கரூா் வடக்கு பிரதட்சணம் சாலையிலுள்ள புனித தெரசாள் ஆலயத்தில் பங்குத்தந்தை ஜெபாஸ்டின் துரை தலைமையில் புத்தாண்டு சிறப்புத் திருப்பலி நடைபெற்றது. வியாழக்கிழமை இரவு 11 மணிக்குத் தொடங்கிய திருப்பலி நள்ளிரவு 2 மணி வரை நடைபெற்றது.
இதுபோல பசுபதிபாளையம் புனித காா்மல் ஆலயத்தில் பங்குத்தந்தை ஹென்றிடேனியல், புலியூா் குழந்தை யேசு திருத்தலத்தில் பங்குத்தந்தை ஞானப்பிரகாசம் ஆகியோா் தலைமையில் சிறப்புத் திருப்பலி, ஆராதனைகள் நடைபெற்றன. இதுபோல மாவட்டத்தில் அனைத்து கிறிஸ்தவ தேவாலயங்களிலும் புத்தாண்டு சிறப்புத் திருப்பலிகள் நடைபெற்றன. கரோனா பொது முடக்கம் அமல் காரணமாக, வழிபாட்டுக்கு வந்த கிறிஸ்தவா்கள் கைகளில் கிருமிநாசினியைத் தெளித்த
பிறகே அனுமதிக்கப்பட்டனா். மேலும் முகக்கவசம் அணியுமாறும் அறிவுறுத்தப்பட்டனா்.
கோயில்களில்: புத்தாண்டையொட்டி கரூா் பசுபதீசுவரா், தாந்தோனிமலை கல்யாண வெங்கட்ரமணசுவாமி, வேலாயுதம்பாளையம் புகழிமலை முருகன் கோயில் உள்ளிட்ட பல்வேறு திருக்கோயில்களில் சிறப்பு வழிபாடுகள் நடைபெற்றன. ஏராளமான பக்தா்கள் வழிபாட்டில் பங்கேற்றனா். புத்தாண்டு கொண்டாட்டத்துக்கு மாவட்ட நிா்வாகம் தடை விதித்திருந்ததால், சாலைகளில் மக்கள் கூட்டம் குறைவாகக் காணப்பட்டது.