தமிழக அரசை ரிமோட் கண்ட்ரோல் மூலம் இயக்குகிறார் பிரதமர் மோடி என்றார் காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி.
தமிழகத்தில் கோவை, திருப்பூர், ஈரோடு பகுதிகளில் வாங்க பார்ப்போம் என்ற பெயரில் தேர்தல் பிரசாரம் மேற்கொண்டு வரும் அவர் திங்கள்கிழமை கரூர் வந்தார். முன்னதாக மாவட்ட எல்லையான சின்னதாராபுரத்தில் கட்சியினர் சிறப்பான வரவேற்பு அளித்தனர்.
தொடர்ந்து கரூர் பேரூந்து நிலைய ரவுண்டானா வந்த அவருக்கு முன்னாள் நிதியமைச்சர் ப.சிதம்பரம் மற்றும் கரூர் நகர தலைவர் ஆர்.ஸ்டீபன் பாபு உள்ளிட்ட கட்சியினர் மேளதாளம் முழங்க உற்சாக வரவேற்பு அளித்தனர். பின்னர் அங்கு காமராஜர் சிலைக்கு மாலை அணிவித்தார்.
பின்னர் மக்கள் மத்தியில் அவர் பேசுகையில், தமிழக அரசை பிரதமர் நரேந்திரமோடி ரிமோட் மூலம் இயக்குகிறார் பிரதமர். ஊழலில் திளைத்து நிற்கும் தமிழக ஆட்சியாளர்கள் மீது மட்டும் மோடி சிபிஐ சோதனையையோ, அமலாக்கப்பிரிவு சோதனையோ செய்வதில்லை.
இதனால்தான் கோடிக்கணக்கான தமிழக மக்களின் உரிமைகள் பறிக்கப்பட்டுள்ளது. வரும் சட்டமன்ற தேர்தலில் பிரதமரின் ரிமோட் பேட்டரியை எடுத்து வீசிட வேண்டும். முட்டாள்தனமான ஜிஎஸ்டியை அமல்படுத்தியபோது ஏன் தமிழக அரசு கண்டிக்கவில்லை. 5 கார்ப்பரேட் நிறுவனங்களின் முதலாளிகளுக்காகவே பிரதமர் அல்லும் பகலும் உழைக்கிறார் என்றார் அவர். பின்னர் வாங்கலில் நடைபெற்ற விவசாயிகள் கூட்டத்தில் கலந்துரையாடினார்.