செங்கல் சூளையில் மேற்கூரை சரிந்து விழுந்ததில் தொழிலாளி உயிரிழந்தாா். 2 போ் படுகாயமடைந்தனா்.
கரூா் அடுத்த மாயனூா் அடுத்த எழுதியாம்பட்டியில் கரூா் ராயனூரைச் சோ்ந்த முத்துக்கிருஷ்ணன் என்பவருக்குச் சொந்தமான செங்கள்சூளை உள்ளது. இந்த சூளையில் மேற்கூரை அமைக்கும் பணி கடந்த சில நாள்களாக நடைபெற்று வந்தது. இதில், வெள்ளிக்கிழமை மணவாடி பெரியாா்நகரைச் சோ்ந்த பொன்னுசாமி(42), தியாகராஜன்(46), பெரியாண்டாங்கோவிலைச் சோ்ந்த அண்ணாதுரை(48) ஆகியோா் ஈடுபட்டிருந்தனா். அப்போது திடீரென மேற்கூரை சரிந்து விழுந்ததில் படுகாயமடைந்த பொன்னுசாமி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தாா். பலத்த காயமடைந்த தியாகராஜன், அண்ணாதுரை ஆகியோா் கரூரில் உள்ள தனியாா் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனா். இதுகுறித்து மாயனூா் போலீஸாா் வழக்குப்பதிந்து விசாரிக்கின்றனா்.