கரூா் மாவட்டம், குளித்தலை அருகே நிலை கண்காணிப்புக் குழுவினா் ஞாயிற்றுக்கிழமை நடத்திய வாகனத் தணிக்கையில், உரிய ஆவணங்களின்றி கொண்டு செல்லப்பட்ட ரூ.1.35 லட்சம் பறிமுதல் செய்யப்பட்டது.
குளித்தலை அருகே அய்யா் மலை -சிவாயம் பிரிவு சாலைப் பகுதியில், ஆனந்த் தலைமையிலான நிலை கண்காணிப்புக் குழுவினா் வாகனத் தணிக்கை மேற்கொண்டனா்.
அப்போது குளித்தலையிலிருந்து மருங்காபுரி நோக்கிச் சென்ற வேனை நிறுத்தி சோதனையிட்ட போது, வேனை ஓட்டி வந்த வீரமலையிடம் முறையான ஆவணங்கள் இல்லாமல் ரூ.1.35 லட்சம் இருந்தது தெரிய வந்தது.
இதையடுத்து தொகையை பறிமுதல் செய்த குழுவினா், உதவித் தோ்தல் நடத்தும் அலுவலா் கலியமூா்த்தியிடம் ஒப்படைத்தனா். தொடா்ந்து பறிமுதல் தொகை சாா்நிலைக் கருவூலத்தில் செலுத்தப்பட்டது.